பூப்பெய்த மாணவி; வகுப்பறைக்குள் அனுமதி மறுப்பு - வாசலில் தேர்வு எழுதவைத்த அவலம்
பூப்பெய்த மாணவியை வகுப்பறைக்குள் அனுமதிக்காமல் வாசலில் அமர வைத்து தேர்வு எழுத வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பூப்பெய்த மாணவி
கோவை, கிணத்துக்கடவு அருகே செங்குட்டைபாளையத்தில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு எட்டாம் வகுப்பு படிக்கும் சிறுமி 5 நாட்களுக்கு முன் பூப்பெய்தி உள்ளார்.
இந்நிலையில், தற்போது முழு ஆண்டு தேர்வுகள் நடைபெற்று வருவதால் தேர்வு எழுதுவதற்காக அந்த சிறுமி பள்ளிக்கு வழக்கம்போல சென்றுள்ளார்.
அனுமதி மறுப்பு
ஆனால், பள்ளி நிர்வாகத்தினர் மாதவிடாயை காரணம் காட்டி சிறுமியை வகுப்பறைக்குள் அனுமதிக்காமல் வகுப்பறையின் வாசலிலேயே அமர வைத்து தேர்வு எழுத வைத்துள்ளனர்.
இதனை சிறுமியின் தாய் தனது செல்போனில் பதிவு செய்துள்ளார். அதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது பேசு பொருளாகியுள்ளது.