எங்க இங்க இருந்த டவர காணோம்..? திருடி எடைக்குப் போட்ட பகீர் சம்பவம்!
செல்போன் டவரை திருடி விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செல்போன் டவர்
சேலம், வாழப்பாடி அருகே உள்ள எம் பெருமாள்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது சொந்தமான இடத்தில் 2001 ஆம் ஆண்டு தனியார் நிறுவனம் சார்பில் செல்போன் டவர் அமைக்கப்பட்டது.
மேலும், செல்போன் டவரை பாதுகாக்க அந்த பகுதியை சேர்ந்த ஒருவரை நியமித்திருந்தனர். இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் இறுதியில் 10 பேர் கொண்ட கும்பல் ஒன்று அங்கிருந்த பாதுகாவலர்களிடம் சில போலியான ஆவணங்களை காட்டி செல்போன் டவர் செயல்படாமல் உள்ளது.
பணியாளர்கள் அதிர்ச்சி
எனவே அதை கழற்றி வேறு இடத்திற்கு அமைக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். பின்னர் செல்போன் டவரை கிரேன் கொண்டு கழற்றி திருடிச் சென்றுள்ளனர். கடந்த சில நாள்களுக்கு முன்பு சம்பந்தப்பட்ட செல்போன் நிறுவனத்தை சேர்ந்த பணியாளர்கள் பராமரிப்பு பணிக்காக
செல்போன் டவர் அமைந்திருக்கும் இடத்திற்கு சென்று பார்த்தபோது, இடம் வெறிச்சோடி கிடந்துள்ளது. இதனைக் கண்ட பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்து, நிறுவனத்தின் மேலாளர் தமிழரசனிடம் தகவல் தெரிவித்துள்ளார்.
திருடிய கும்பல்
தொடர்ந்து, காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தினர். அதில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில், திருநெல்வேலி, நாங்குநேரி பகுதியை சேர்ந்த நாகமுத்து, தூத்துக்குடி, ஆழ்வார் திருநகரி பகுதியை சேர்ந்த சண்முகம்,
சேலம், வாழப்பாடி காமராஜர் நகரை சேர்ந்த ராகேஷ் சர்மா ஆகியோரை கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து 6.46 லட்சம் ரொக்கம் 9 டன் டவர் இரும்பு, ஒரு ஜெனரேட்டர் ஆகியவற்றை விருதுநகரில் பறிமுதல் செய்த போலீஸார் மேலும் இதில் சம்பந்தப்பட்ட முக்கிய புள்ளிகளை தேடி வருகின்றனர்.
தூக்கிய போலீஸார்
பிடிபட்ட நபர்களிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டதில், இதுபோன்று செல்போன் டவர்களை நோட்டமிட்டு திருடி வந்துள்ளதும், விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே எடை மேடு பகுதியில் தனியார் வே-பிரிட்ஜில் எடை போட்டு அந்த எடை மேடையின் உரிமையாளரிடமே பொருள்களை விற்றதும் தெரியவந்தது.
மீதம் இருந்த இரும்பு தளவாடங்களை கோவில்பட்டியை சேர்ந்த வியாபாரியிடம் விற்றதாக கூறியுள்ளனர்.