அண்ணா பெயரை அடமான வச்சுட்டு.. மதத்திற்காக கவலைப்படும் அதிமுக - விளாசிய ஸ்டாலின்
அண்ணாவின் பெயரை அதிமுக அடமானம் வைத்துவிட்டதாக முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
அண்ணா விவகாரம்
திருப்பத்தூரில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், மகளிர் உரிமைத் தொகை சில பகுதிகளில் கிடைக்காத விடுபட்டிருக்கிற நிலை இருந்து கொண்டு இருக்கிறது.
விடுபட்டவர்களுக்கான மகளிர் உரிமைத் தொகை ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மத்தியில் ஆட்சி செய்பவர்கள் தமிழ்நாட்டு மக்களை மதத்தால், சாதியால் தொடர்ந்து பிளவுபடுத்த முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.
ஸ்டாலின் காட்டம்
அவர்களால் முடியாத போது, அதிமுகவையும் சேர்த்து கொள்கிறார்கள். நாட்டின் வேலைவாய்ப்பு விகிதம் குறைகிறது என்று கூறினால், அதிமுக - பாஜக தரப்பில் மதத்திற்காக கவலைப்படுகிறார்கள். இதுதான் அவர்களின் அரசியல். தமிழ்நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த படாதபாடு படுகிறார்கள்.
பெரியார், அண்ணாவை கொச்சைப்படுத்தி வீடியோ போகிறார்கள். அதனை அண்ணா பெயரில் கட்சி நடத்தும் கூட்டம் கைகட்டி வேடிக்கை பார்க்கிறது. அண்ணா பெயரை அடமானம் வைத்த அதிமுகவை, நாளை தமிழ்நாட்டை அடமானம் வைக்க அனுமதிக்க கூடாது என்று தெரிவித்துள்ளார்.
அண்ணாவை விமர்சித்த இந்து முன்னணி மற்றும் பாஜக குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இதுவரை கருத்து கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.