முதலமைச்சருக்கே அரசு மருத்துவமனை மீது நம்பிக்கை இல்ல; அதனால்தான் அப்போலோ - தமிழிசை தாக்கு!
அப்போலோ தரத்திற்கு அரசாங்க மருத்துவமனைகளும் இருக்க வேண்டும் என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
அரசு மருத்துவமனைகள்
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் குறித்த ஆதங்கத்தை தமிழிசை சௌந்தரராஜன் வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
“இன்று தமிழகத்தில் அனைத்து மருத்துவமனையிலும் மக்களுக்கான முழுமையான வசதி இருக்க வேண்டும் என்பதே எனது எண்ணம். நான் எப்பொழுதெல்லாம் நிர்வாகத்தில் இருந்தேனோ அப்பொழுதெல்லாம் அரசாங்க மருத்துவமனைகளை மேம்படுத்துதற்காக தனிக் கவனம் செலுத்தியிருக்கிறேன்.
கரோனா காலத்தில் ஆக்சிஜன் முதற்கொண்டு எந்த பற்றாக்குறை இல்லாமல் பார்த்துக் கொண்டேன். தமிழகத்தில் முதலமைச்சர் உட்பட நம்பிக்கையுடன் சென்று சிகிச்சை பெரும் அளவிற்கு அரசாங்க மருத்துவமனைகள் இல்லையே என்பதுதான் எனது ஆதங்கம்.
தமிழிசை ஆதங்கம்
கோடீஸ்வரர்களுக்கு கிடைக்கும் சிகிச்சை கோடியில் வாடிக் கொண்டிருக்கும் சாமானியனுக்கும் கிடைக்க வேண்டும் என்பதே எனது ஆதங்கம். புதுச்சேரியில் தடுப்பூசி போடப்பட்ட போது கூட. அதை அரசாங்க மருத்துவமனைக்குச் சென்று தான் நான் போட்டுக் கொண்டேன்.
அந்த நிலை தமிழகத்தில் ஏன் இல்லை என்று தான் எனது ஆதங்கம். எல்லோர் உடல் நிலையும் ஒன்றுதான் எல்லோரின் இதயமும் தன் குடும்பத்திற்காக தான் அடித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் ஏழையின் இதயத்திற்கு கிடைக்க வேண்டிய பாதுகாப்பு அரசாங்க மருத்துவமனையில் கிடைக்கவில்லையே என்பதுதான் எனது வேதனை.
அதை மேம்படுத்த வேண்டும் என்பதற்காகவே முதல்வரும் செல்லும் அளவிற்கு அரசாங்க மருத்துவமனைகள் இருக்க வேண்டும். அப்போலோ தரத்திற்கு அரசாங்க மருத்துவமனைகளும் இருக்க வேண்டும் என்ற ஆதங்கத்தை தான் நான் வெளிப்படுத்துகிறேன் தவிர இதில் அரசியல் இல்லை.” எனக் குறிப்பிட்டுள்ளார்.