ரோஹித், கோலி 2027 உலகக்கோப்பையில் பங்கேற்பது கஷ்டம் - கங்குலி ஷாக் தகவல்
கோலி, ரோஹித் 2027 உலகக்கோப்பையில் பங்கேற்பது குறித்து கங்குலி பேசியுள்ளார்.
உலகக்கோப்பை 2027
14-வது உலகக்கோப்பை 2027-ம் ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறவுள்ளது. இந்த உலகக்கோப்பையை தென் ஆப்ரிக்கா, ஜிம்பாப்வே நாடுகள் இணைந்து நடத்துகின்றது.
இந்நிலையில் டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெற்ற கோலி, ரோஹித் இந்த உலகக்கோப்பையில் பங்கேற்பது குறித்து கங்குலி பேசுகையில், “அந்த உலகக்கோப்பை நடக்கும்போது விராட் கோலிக்கு 38, ரோஹித் சர்மாவுக்கு 40 வயதாகியிருக்கும்.
கங்குலி தகவல்
ஏற்கெனவே டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெற்று விட்ட இருவருக்கும், 2027-ம் ஆண்டுக்கான உலகக் கோப்பையில் பங்கேற்கும் இந்திய அணியில் இடம்பெறுவது எளிதான விஷயமாக இருக்காது. அடுத்த உலகக் கோப்பை வரை இந்தியா, இன்னும் 27 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமே விளையாட இருக்கிறது.
அதன்படி பார்த்தால் இருவரும் அடுத்த 2 ஆண்டுகளில் தலா 15 ஒரு நாள் போட்டிகளில் மட்டுமே விளையாட முடியும். விராட் கோலியும், ரோஹித் சர்மாவும் அற்புதமான கிரிக்கெட் வீரர்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
ஆனால், 2027-ம் ஆண்டு வரை அவர்கள் முழுமையான உடற்தகுதியுடன் இருக்க வேண்டும். அது கடினமான விஷயம். அதற்கேற்ப அவர்கள் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளவேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.