6 பந்துகளில் 6 சிக்ஸர்கள்: மிரண்டு போன இலங்கை வீரர்- வைரலாகும் வீடியோ காட்சிகள்
இலங்கை அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் மேற்கிந்திய தீவு அணியின் அதிரடி ஆட்டக்காரரான கிரன் பொல்லார்ட் 6 பந்துக்கு ஆறு சிக்ஸர்கள் அடித்து சாதனை படைத்தார். இலங்கை அணி மேற்கிந்திய தீவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, முதலில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
இதில் இரு அணிகளுக்கிடையே நேற்று முதல் டி20 போட்டி நடைபெற்றது, அதன் படி முதலில் ஆடிய இலங்கை அணியில் துவக்க வீரரான நிரோஷன் டிக்வெல்லா 33 ஓட்டங்களில் வெளியேற, அடுத்து வந்த வீரர்களில் பதும் நிஷன்க்கா 39 ஓட்டங்கள் எடுக்க, இவரைத் தொடர்ந்து வந்த அடுத்தடுத்த வீரர்கள் சொதப்பியதால், இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 139 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
மேற்கிந்திய தீவு அணியில், அதிகபட்சமாக ஒபேட் மேகாய் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அதைத் தொடர்ந்து 140 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய தீவு அணி அணியில் துவக்க வீரரான லிண்டன் சிம்மன்ஸ் 26 ஓட்டங்களும், இவின் லிவிஸ் 28 ஓட்டங்களும், மிகவு எதிர்பார்க்கப்பட்ட கிறிஸ் கெய்ல் டக் அவுட் ஆகியும் வெளியேறினார்.
அதன் பின் ஜேஷன் ஹோல்டருன் ஜோடி சேர்ந்த கிரன் பொல்லார்ட் இலங்கை அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்தார்.
குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர், அகிலா தனஞ்சயா பந்து வீச்சில் பொல்லார்ட் தொடர்ந்து ஆறு சிக்ஸர்கள் பறக்கவிட்டார். வெறும் 11 பந்தில் 38 ஓட்டங்கள் எடுத்து மேற்கிந்திய தீவு அணியின் வெற்றிக்கு உதவினார்.
ஆறு பந்துக்கு ஆறு சிக்ஸர் அடித்ததன் மூலம், தென் ஆப்பிரிக்கா வீரர் கிப்ஸ், இந்திய வீரர் யுவராஜ் சிங் வரிசையில் தற்போது கிரன் பொல்லார்ட் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.