ஜெயலலிதா எதிர்த்த திட்டத்தை அனுமதித்தவர் பழனிசாமி - அமைச்சர் சிவசங்கர் குற்றச்சாட்டு
சொத்துவரி அதிமுக ஆட்சியில்தான் உயர்த்தப்பட்டது என சிவசங்கர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சொத்து வரி உயர்வு
தமிழக அரசின் சொத்து வரி உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் இன்று(08.10.2024) தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மனித சங்கிலி போரட்டம் நடத்தப்பட்டது.
இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அமைச்சர் சிவசங்கர்
அப்போது பேசிய அவர், "சொத்து வரி உயர்வை கண்டித்து அ.தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது. ஆனால் அ.தி.மு.க ஆட்சியில்தான் சொத்து வரி உயர்த்தப்பட்டது என்பதை எடப்பாடி பழனிசாமி மறந்து விட்டார்.
2018-ல் குடியிருப்பு மற்றும் வணிக வளாகங்களுக்கு 50 முதல் 100 சதவீதம் வரை சொத்து வரியை உயர்த்தினார்கள். அதன் பிறகு உள்ளாட்சி தேர்தலுக்காக அந்த வரி உயர்வை திரும்ப பெற்றார்கள். இதே போல் உதய் மின் திட்டத்தில் தமிழகத்தை இணைத்து மின் கட்டண உயர்வுக்கு அடித்தளமிட்டது அவர்கள்தான்.
குறிப்பாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எந்த திட்டங்களை எல்லாம் எதிர்த்தாரோ அந்த திட்டங்களில் எல்லாம் எடப்பாடி பழனிசாமி கையெழுத்திட்டுள்ளார். அதிமுகவை தன்வசமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே சொத்து வரி உயர்வை எதிர்த்து போராட்டம் நடத்துகிறார்கள்" என பேசினார்.