ஆர்எஸ்எஸ் ஊர்வலத்தில் அதிமுக எம்எல்ஏ தளவாய் சுந்தரம் - அதிரடி காட்டிய எடப்பாடியார்
அதிமுக எம்எல்ஏ தளவாய் சுந்தரம் கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
தளவாய் சுந்தரம்
2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் தளவாய் சுந்தரம். இவர் ஏற்கனவே ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சராக இருந்தார்.
பின்னர் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார். அதற்கு முன் அதிமுக சார்பில் ராஜ்ய சபா எம்பியாக இருந்தார்.
ஆர்எஸ்எஸ் ஊர்வலம்
ஆர்எஸ்எஸின் 100 வது ஆண்டு தினத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆர்எஸ்எஸ் சார்பில் ஊர்வலம் நடைபெற்றது. இதில் கன்னியாகுமாரியில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் ஊர்வலத்தை தளவாய் சுந்தரம் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இது அதிமுகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. தளவாய் சுந்தரம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிமுகவில் குரல் எழுந்தது. இந்நிலையில் தளவாய் சுந்தரம் வகித்து வந்த கட்சி பதவிகள் பறிக்கப்பட்டுள்ளது.
கட்சி பதவி பறிப்பு
இது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாகவும்; கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு நடந்துகொண்டதாகவும் கிடைத்த தகவலின் அடிப்படையில், இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டி உள்ளது.
இதனால், கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த திரு. என். தளவாய்சுந்தரம், M.L.A., அவர்கள், தான் வகித்து வரும் கழக அமைப்புச் செயலாளர், கன்னியாகுமரி கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் ஆகிய பொறுப்புகளில் இருந்து தற்காலிகமாக விடுவிக்கப்படுகிறார்" என கூறப்பட்டுள்ளது.
இது குறித்து பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, "தளவாய் சுந்தரத்தை வரவேற்கிறேன்" என பதில் அளித்துள்ளார்.