நமக்கு 65% முன்னிலை உள்ளது - இது தான் டார்கெட் - நிர்வாகிகளுக்கு ஆர்டர்யிட்ட புஸ்ஸி ஆனந்த்..!
வரும் 2026-இல் தலைவர் விஜயை முதல்வர் நாற்காலியில் அமர வைக்கவேண்டும் என பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நிர்வாகிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
புஸ்ஸி ஆனந்த் பேச்சு
சென்னையில் நேற்று(08-02-2024) இரவு தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பேசும் போது, விஜய் மக்கள் இயக்கம் எவ்வாறு செயல்பட்டதோ அப்படித்தான் தமிழக வெற்றி கழகமும் பொதுமக்களின் சேவையுடன் செயல்பட வேண்டும் என்ற கேட்டுக்கொண்டார்.
மாவட்ட செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள் எதற்கும் பயப்பட வேண்டாம் என அறிவுறுத்திய அவர், உங்கள் ஒவ்வொருவருக்குள் தலைவர் விஜய் இருக்கிறார் என்று கூறி, பொதுமக்களின் சேவைக்கு எது எதிராக வந்தாலும் அதை துடைத்து எரியுங்கள் என கூறினார்.
மேலும், தளபதி பயிலகம், நூலகம், விலையில்லா உணவகம், ரொட்டி பால் முட்டை திட்டம் என அனைத்து திட்டங்களும் தொடர்ந்து செயல்பட வேண்டும் என தெரிவித்த புஸ்ஸி ஆனந்த், கட்சி பெயரை டெல்லியில் பதிவு செய்த நொடியே கட்சி தமிழகம் முழுவதும் பரவியுள்ளதாக கூறி, அதுதான் தலைவர் விஜயின் பலம் என பெருமிதத்துடன் தெரிவித்தார்.
2026 ஆம் ஆண்டில் முதல்வர் யார் என்று பொதுமக்கள் தற்போது யோசித்து வரும் நிலையில், அனைவரது கருத்துக்கணிப்பில் 65 சதவீதம் தமிழக வெற்றி கழகம் முன்னிலையில் இருக்கிறது என்று குறிப்பிட்ட புஸ்ஸி ஆனந்த், நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து கட்சியை வளர்க்க வேண்டும் என அறிவுரை கூறினார்.
விரைவில் கட்சியின் சின்னம் மற்றும் கட்சி கொடி நிறங்களை அதிகாரப்பூர்வமாக கட்சியின் தலைவர் வெளியிட உள்ளார் என தகவல் அளித்து, இனிமேல் கட்சியின் முக்கிய தகவல்களை முழுவதும் தலைவர் தான் அறிவிப்பார் என்றும் தங்கள் பணியை முடித்துவிட்டு தினந்தோறும் ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் கட்சிக்காக உழைக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
2026 ஆம் ஆண்டில் தமிழகத்தின் முதல்வராக தலைவர் விஜய் யை உட்கார வைக்க சேவைகளை நாம் தொடர்ந்து செய்ய வேண்டும் என்ற புஸ்ஸி ஆனந்த், தேர்தல் நேரத்தில் மட்டுமில்லாமல் தற்போது இருந்தே நாம் உழைத்தால் தான் வெற்றி பெற முடியும் என்று கூறினார்.