தோனி பற்றி கனவு இருந்தது; அது உடைஞ்சப்ப மோசமான ஃபீல் - ஷிவம் துபே
தோனி குறித்து சிவம் துபே பல தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
சிவம் துபே
சிவம் துபே சர்வதேச கிரிக்கெட்டில் 2019 ஆம் ஆண்டு அறிமுகமானார். அவரை ஐபிஎல் தொடரில் முதல்முறையாக ஆர்சிபி அணி வாங்கியது. அந்த நேரத்தில் ஆர்சிபி அணி மிக மோசமாக செயல்பட்டது.
2022ல் ஐபிஎல் மெகா ஏலத்தில் சிவம் துபேவை சிஎஸ்கே அணி வாங்கியது. தொடர்ந்து, அணி நிர்வாகம் மற்றும் தோனி சில முக்கிய மாற்றங்களை அவருடைய பேட்டிங்கில் ஏற்படுத்தினார்கள். தற்போது டி20 கிரிக்கெட்டில் முக்கிய வீரராக மாறியுள்ளார்.
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள சிவம் துபே, “எனக்கு எப்பொழுதும் இந்திய அணிக்கு விளையாட வேண்டும் எம்எஸ்.தோனி உடன் இணைந்து விளையாட வேண்டும் என்கின்ற கனவு இருந்து வந்தது. நான் இந்திய அணிக்காக அறிமுகமான பொழுது தோனி ஓய்வு பெற்றுவிட்டார்.
தோனி பங்கு
அதை நான் மோசமாக உணர்ந்தேன். ஐபிஎல் தொடரின் அறிமுகத்திலும் நான் அவருடன் இணைய முடியவில்லை. பிறகு சிஎஸ்கே அணிக்கு வந்தேன். இது எனக்கு ஒரு பெரிய சந்தர்ப்பமாக அமைந்தது. இப்போது அவருடன் என்னால் நிறைய பேச முடியும். ஆனால் ஆரம்பத்தில் அவருடன் நான் பேசும் பொழுது நிறைய பதட்டமாக இருப்பேன்.
அவர் ஒரு பெரிய வீரர். அவர் ஒரு வீரரை பற்றி புகழ்ந்தால் அது அந்த வீரருக்கு பெரிய விஷயமாக தன்னம்பிக்கையை அதிகரிப்பதாக அமையும். இப்படித்தான் எனக்கும் நடந்தது. அவருடைய பங்கு மிகவும் முக்கியமானது என்று நான் நினைக்கிறேன்.
தோனி பல விஷயங்களில் உதவியிருக்கிறார். அவரிடமிருந்து நிறைய சிறந்த ஆலோசனைகளை பெற்று இருக்கிறேன். நான் எவ்வளவு நெருக்கமாக அவருடன் இருந்தாலும் கூட, நான் அவருடைய ரசிகனாகவே தொடர்வேன்” எனத் தெரிவித்துள்ளார்.