சூர்யகுமாரை கேப்டன் ஆக்க காரணமே.. அந்த வீரர்கள் சொன்ன விஷயம் தான் - போட்டுடைத்த அகர்கர்
கேப்டனாக சூர்யகுமார் யாதவை நியமித்த காரணம் குறித்து அஜித் அகர்கர் பேசியுள்ளார்.
கேப்டன் நியமனம்
2024 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி வெற்றி பெற்று இரண்டாவது டி20 உலகக் கோப்பையை கைப்பற்றியது. தொடர்ந்து, ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றனர்.
கவுதம் கம்பீர் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். அதன்பின், டி20 அணிக்கு அப்போதைய துணை கேப்டன் ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்த்த நிலையில், சூர்யகுமார் யாதவ் அறிவிக்கப்பட்டார்.
ஹர்திக் பாண்டியாவுக்கு துணை கேப்டன் பதவி கூட அளிக்கப்படவில்லை. சுப்மன் கில் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் இதுகுறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசியுள்ள அஜித் அகர்கர், "இந்திய அணிக்கு கேப்டனாகக் கூடிய தகுதி உடைய வீரர்களில் சூர்யகுமார் யாதவும் ஒருவர்.
அஜித் அகர்கர் பேட்டி
அதனால் தான் அவரை கேப்டனாக நியமித்தோம். அவர் சர்வதேச டி20யில் சிறந்த பேட்ஸ்மேன், கேப்டனாக இருக்கக் கூடியவர். தொடர்ந்து அனைத்து தொடர்களிலும் ஆடக்கூடிய ஒருவராக இருக்க வேண்டும். இடையே சில தொடர்களில் ஆடாமல் இருந்தால் அது சரியாக இருக்காது.
ஹர்திக் பாண்டியா அந்த வகையில் தான் சரியாக இருக்க மாட்டார் என நினைத்தோம். அவரது உடற் தகுதி அவருக்கு சவாலாக இருக்கும் என நாங்கள் நினைத்தோம்.
நாங்கள் இந்திய அணியின் சக வீரர்களிடம் இது குறித்து கருத்து கேட்டோம். அதன் அடிப்படையிலேயே சூர்யகுமார் யாதவ் டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.