திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி மீது தேர்தல் ஆணையத்தில் புகார்
தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிராகவும், அரசு அதிகாரிகளை மிரட்டும் வகையிலும் பேசிய செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அதிமுக சார்பில், தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கரூர் பகுதியில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, திமுக தேர்தல் பணிமனை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் பேசியபோது, ‘ஸ்டாலின் பதவி ஏற்றுக்கொண்டவுடன் மாட்டுவண்டிகள் மூலம் மணல் அள்ள இருக்கும் தடைகள் அகலும்.
இதைத் தடுக்கும் அதிகாரிகள் யாரும் தடுக்க மாட்டார்கள்’ என பேசியிருந்தார். செந்தில் பாலாஜியின் பேச்சு சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் பாபு முருகவேல் செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
புகாரில், அதிகாரிகளை மிரட்டும் வகையில் பேசியது கண்டிக்கத்தக்கது என்றும், நீதிமன்ற உத்தரவு, தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றாமலும், மக்களை தூண்டும் வகையில் பேசிய செந்தில் பாலாஜி மீது வழக்கு பதிவு செய்து குற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தலைமை தேர்தல் அதிகாரியிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.