உயிருக்கு பாதுகாப்பில்லை..திலகவதி ஐ.பி.எஸ், மகன் மீது மருமகள் பரபரப்பு புகார்!
திலகவதி ஐ.பி.எஸ், மற்றும் மகன் மீது அவரது மருமகள் பரபரப்பு வரதட்சணை புகார் தெரிவித்துள்ளார்.
முன்னாள் டிஜிபி திலகவதி
தமிழக முன்னாள் டிஜிபி திலகவதி. இவரது மகன் டாக்டர் பிரபு திலக். இவர் தொழில் அதிபர் கண்ணுசாமி என்பவரின் மகள் ஸ்ருதியை திருமணம் செய்தார். இந்நிலையில், ஸ்ருதி தனது தந்தையுடன் மாநகர காவல் ஆனையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை கொடுத்தார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், தனக்கும் தமிழக முன்னாள் டிஜிபி திலகவதி அவர்களின் மகன் டாக்டர் பிரபுதிலக்குக்கும் கடந்த 2007-ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. தற்போது தங்கள் இருவருக்கும் 14 வயதில் ஒரு பெண் குழந்தையும், ஏழு வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.
கணவருடன் தகராறு
திருமணத்தின்போது சேலத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்றில் தனது கணவர் மருத்துவ பேராசிரியராக பணியாற்றி வந்தார். எனது கணவருக்கும் அவருடன் பணியாற்றி வந்த பெண் டாக்டர் ஒருவருக்கும் கள்ள தொடர்பு இருந்து வந்தது.
அந்த பெண் டாக்டர், குடும்ப நண்பர் என்பதால் முதலில் எனக்கு தெரியவில்லை. அதன்பின் நாங்கள் சென்னைக்கு வந்து மாமியார் திலகவதியுடன் தங்கினோம். அங்கு வேறொரு பெண் மருத்துவருடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டது.
வரதட்சணை கொடுமை
இப்படி பல பெண்களுடன் அவருக்கு தொடர்பு இருந்ததால் எங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் சினிமா படம் எடுக்கிறேன் பணம் வேண்டும் என்று எனது அப்பாவிடம் கேட்டார். எனது அப்பாவும் வீட்டை அடமானம் வைத்து ஒரு கோடி ரூபாய் பணம் கொடுத்தார் என்று கூறினார்.
மேலும், மது போதைக்கு அடிமையானார். அன்று முதல் தன்னை அடித்து துன்புறுத்தி வருகிறார். கடந்த நான்கு மாதத்திற்கு முன்பு தன்னை கடுமையாக தாக்கியதில் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து அப்போது சென்னை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்த போது, மாமியார் திலகவதி தனது அதிகாரத்தை பயன்படுத்தி விசாரணை இல்லாமல் செய்து விட்டார்.
மருமகள் புகார்
மேலும் என்னிடம் இருந்த 170 சவரன் நகை மற்றும் பணத்தை பறித்துக் கொண்டு சித்ரவதை செய்தனர். எனவே எனது உயிருக்கு பாதுகாப்பு இல்லாத நிலையில் தான் தற்போது குழந்தைகளுடன் தற்போது அப்பா வீட்டுக்கு வந்து விட்டேன்.
எனது உயிருக்கும் எனது குழந்தைகள் உயிருக்கும் ஆபத்து உள்ளது. எனவே எங்களுக்கு பாதுகாப்பு கேட்டு தற்போது சேலம் மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளோம் என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.