விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; பாமக போட்டியிட இதான் காரணம்..செல்லூர் ராஜூ அதிரடி!
விக்கிரவாண்டியில் பாமக போட்டியிடுவது ஏன் என்பது குறித்து செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
பாமக போட்டி
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் காலமானார். இதனால் தொகுதி காலியானது. இந்த நிலையில், விக்கிரவாண்டி தொகுதிக்கு வரும் ஜூலை 10-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதை தொடர்ந்து, ஜூலை 13ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும். இந்த தேர்தலில், திமுக சார்பில் அன்னியூர் சிவா, நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் அபிநயா ஆகியோர் போட்டியிடுகின்றனர். அதோடு தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாமக வேட்பாளராக சி அன்புமணி போட்டியிடுகிறார்.
அதே சமயத்தில், அதிமுக, தேமுதிக இந்த தேர்தலை புறக்கணித்துள்ளது. அதிமுகவின் இந்த முடிவு தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. இது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சரான செல்லூர் ராஜூ பேசியுள்ளார்.
இதான் காரணம்
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தபோது அவர், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக போட்டியிடுவதற்கான காரணம் என்ன என்பது குறித்து தெரிவித்துள்ளார். அதாவது தனது வாக்கு வங்கியை தெரிந்து கொள்வதற்காகதான் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக போட்டியிடுகிறது என கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், பாஜக, அதிமுக இடையே ஒட்டும், உறவும் இல்லை என ஏற்கனவே தெரிவித்துவிட்டதாக கூறினார். மேலும், திமுக அரசு சட்டத்துக்கு புறம்பாக செயல்பட வாய்ப்பு உள்ளதால் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணித்து உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் காங்கிரஸ் கட்சியை கட்டி காக்க ராகுல் காந்தி விடா முயற்சி எடுத்து வருகிறார் என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு தனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.