வார்த்தையை விட்ட ராமதாஸ்; முதல்வருக்கு மரியாதை கொடுங்கள் - எச்சரித்த சேகர்பாபு
வயதில் மூத்தவராக இருந்தாலும் முதல்வருக்கு மரியாதை கொடுங்கள் என சேகர்பாபு பேசியுள்ளார்.
ராமதாஸ்
கடந்த ஜூலை 25 ம் தேதி பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் திண்டிவனத்தில் தனது 85 வது பிறந்தநாளை கொண்டாடினார். இந்த நிகழ்வில் 86 மரக்கன்றுகளை ராமதாஸ் நட்டு வைத்தார்.

தொடர்ந்து பேசிய அவர், உங்களது அப்பா வீட்டுச் சொத்திலா நான் 10.5 சதவீதம் கேட்கிறேன்? இது எங்கள் நாடு, இது எங்கள் பூமி, இது எங்களால் வளர்ந்தது, இது எங்கள் மண், உனக்கு இங்கே என்ன வேலை? நான் உன்னிடம் 10.5 சதவீத இட ஒதுக்கீடு கேட்க வேண்டுமா, எனக்கு அவமானமாக உள்ளது. உன்னை கோட்டையில் நான் சந்திக்க வேண்டுமா எனக்கு அவமானமாக உள்ளது என பேசினார்.
சேகர் பாபு
இந்நிலையில் இன்று அறநிலைய துறை சார்பில் நடந்து கொண்ட நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர் சேகர் பாபு இதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்பொழுது, முதல்வர் ஸ்டாலினை பாமக நிறுவனர் ராமதாஸ் ஒருமையில் பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த அவர், "ராமதாஸ் வயதில் மூத்தவராக இருந்தாலும் நாட்டின் முதலமைச்சருக்கு அதற்கு உண்டான மரியாதை கொடுக்க வேண்டும். திராவிட முன்னேற்ற கழகம் சந்திக்காத ஏச்சுகள் பேச்சுக்கள் கிடையாது. நூறு வயதை கடந்த கலைஞரை கூட ஒரு சில சமயங்களில் விமர்சிக்கிறார்கள்.
இப்படி விமர்சிப்பவர்களை சீர்தூக்கிப் பார்த்தால் அவர்கள் தொடர்ந்து தமிழக மக்களால் புறக்கணிக்கப்படுபவர்களாக இருப்பார்கள். தொடர்ந்து வெற்றி வாய்ப்பை இழப்பவர்களாக இருப்பார்கள். அந்த விரக்தியில் தமிழக முதல்வர் நெஞ்சுரம் கொண்ட நேர்மையுடன் ஆட்சியை செலுத்தி மக்களின் நெஞ்சில் நீக்கமற நிறைந்து இருப்பதால் வஞ்சக எண்ணத்தோடு இப்படி பேசுகின்றனர். என பேசினார்.
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan