தோனியால் மன உளைச்சல்; ஓய்வு முடிவு - மனம் திறந்த சேவாக்!
தோனியால் மன உளைச்சலுக்கு ஆளானேன் என சேவாக் தெரிவித்துள்ளார்.
நீக்கிய தோனி
இந்திய அணிக்காக 2007 டி20 உலகக்கோப்பை மற்றும் 2011 ஒருநாள் உலகக்கோப்பை என இரண்டுமுறை உலகக்கோப்பை வென்றவர் சேவாக்.
104 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 49.34 சராசரியுடன் 8586 ரன்கள் அடித்துள்ளார். அதில் 23 சதங்களும் 32 அரைசதங்களும் அடங்கும். 251 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 8273 ரன்கள் குவித்திருக்கும் சேவாக், 15 சதங்களையும் 38 அரைசதங்களையும் விளாசினார்.
இந்திய கிரிக்கெட்டில் கிட்டத்தட்ட 17000 ரன்களை குவித்த இவர், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பல தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில், “2007-2008ஆம் ஆண்டு நாங்கள் ஆஸ்திரேலியாவில் இருந்தபோது,
ஆஸ்திரேலியா, இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையே முத்தரப்பு தொடரான காமன்வெல்த் பேங்க் தொடர் நடைபெற்றது. இந்த தொடரில் இந்தியா 10 போட்டிகளில் விளையாடியது, அதில் நான் முதல் மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடினேன்.
சேவாக் தகவல்
பின்னர் எம்.எஸ். தோனி என்னை அணியிலிருந்து நீக்கிவிட்டார். அதன் பிறகு சிறிது காலம் அணியில் நான் தேர்வு செய்யப்படவேயில்லை. ஒரு கட்டத்திற்கு மேல் இதற்கு பின்னரும் நான் விளையாடும் XI-ல் இடம்பெறாவிட்டால், ஒருநாள் கிரிக்கெட்டை விளையாடுவதில் எந்த அர்த்தமும் இல்லை என்று தோன்றியது.
நான் ஓய்வுபெற்றுவிடலாம் என்ற எண்ணத்திற்கு சென்றேன். பிறகு நான் டெண்டுல்கரிடம் சென்று, 'ODI போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவது பற்றி யோசித்து வருகிறேன்' என்று சொன்னேன். அவர், 'இல்லை அப்படி செய்யாதீர்கள், 1999-2000ஆம் ஆண்டுகளில் இதேபோன்ற ஒரு கட்டத்தை நானும் கடந்து வந்தேன்.
அப்போது நானும் கிரிக்கெட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அந்தநேரமும் கடந்து போனது. எனவே, ஒரு கடினமான கட்டத்தை கடந்துசெல்லவேண்டிய இடத்தில் நீங்கள் தற்போது இருக்கிறீர்கள், இதுவும் கடந்து போகும். நீங்கள் உணர்ச்சிவசப்படும்போது கோபத்தில் எந்த முடிவும் எடுக்காதீர்கள்.
உங்களுக்கு சிறிது நேரம் கொடுத்து 1-2 தொடர்களில் விளையாடுங்கள். அதற்கு பின்னர் ஒரு முடிவை எடுங்கள் என்று கூறினார். பின்னர் நான் அடுத்தடுத்த தொடர்களில் வாய்ப்பு கிடைத்தபோது ரன்களை குவித்தேன். பிறகு 2011 உலகக் கோப்பையை விளையாடினேன், நாங்கள் உலகக் கோப்பையையும் வென்றோம்" எனத் தெரிவித்துள்ளார்.