பாஜக ஒரு வேஸ்ட் லக்கேஜ்...அதிமுகவின் முடிவை வரவேற்கிறேன்...சீமான்
பாஜகவின் கூட்டணியில் இருந்து அதிமுக வெளிவந்துள்ளதை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வரவேற்றுள்ளார்.
முறிந்த கூட்டணி
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறி நேற்று கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி அதிகாரபூர்வமாக அறிவித்தது. தமிழக பாஜக தலைமையின் செயல்பாடுகளை சுட்டிக்காட்டி தான் இந்த முடிவை எடுத்திருப்பதாக அதிமுக அறிவித்துள்ள நிலையில், அக்கட்சியின் தொண்டர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர்.
இது குறித்து இன்னும் பாஜக சார்பில் எந்த கருத்துக்களும் தெரிவிக்கப்படாத நிலையில், நாம் தமிழர் கட்சி சீமான், அதிமுகவின் முடிவை வரவேற்று கருத்து தெரிவித்துள்ளார். நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் இது குறித்து கேள்விகள் போது, பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக பிரிந்துள்ளது மகிழ்ச்சிக்குரியது என தெரிவித்தார்.
மகிழ்ச்சிக்குரிய விஷயம்
மேலும், இதற்கான வாழ்த்தக்களை தான் முன்னரே கூறிவிட்டதாக குறிப்பிட்ட சீமான், பாஜக, காங்கிரஸ் கட்சிகள் எல்லாம் நம்முடைய நிலத்திற்கு தேவையில்லை என குறிப்பிட்டு, இவைகளை கூட அழைத்து சென்று 10 இடம் 2 இடம் என வென்று கொடுப்பது எல்லாம் பயனற்றது என விமர்சித்துள்ளார்.
பாஜகவோ, காங்கிரஸோ இந்த நிலத்தில், இந்த இனத்திற்காக எந்த உரிமைக்காவது நின்றிருக்கிறதா? என்று சொல்லுங்கள் என கேள்வி எழுப்பிய சீமான், கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி தண்ணீர் தரமாட்டேன் என்று சொல்கிறது என்றும் இங்கிருக்கும் காங்கிரஸ் அதை எதிர்த்து போராடுமா? என வினவி, அதேபோலதான் பாஜகவும் ஒரு தொங்கு சதை - எக்ஸ்ட்ரா லக்கேஜ் என விமர்சித்தார்.
எப்போதும் இதுபோன்ற துணிச்சலான முடிவை அதிமுகதான் எடுக்கும் என சுட்டிக்காட்டிய அவர், ஒரு காலத்தில் அம்மையார் ஜெயலலிதா எடுத்திருந்தார் என்றும் தற்போது எடப்பாடி காலம் தாழ்த்தி எடுத்திருக்கிறார் என கூறி எனவே இந்த முடிவு வரவேற்கத்தக்கது, பாராட்டத்தக்கது" என்று கூறினார்.