அடம்பிடித்து தொகுதியை மாற்றிய வேட்பாளர்; ஜெயிக்கலைன்னா செத்துரு..சீமானின் கட்டளை!
நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் திருப்பூர் தொகுதி வேட்பாளரான சீதாலட்சுமி ஜெயிக்கவில்லை எனில் செத்துரு என சீமான் கூறியுள்ளார்.
அடம்பிடித்த வேட்பாளர்
இந்த ஆண்டின் மக்களவை தேர்தலின் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், நாம் தமிழர் கட்சி இம்முறையும் தமிழ்நாடு, புதுவையில் தனித்தே போட்டியிடுகிறது.
அண்மையில் சீமான், கட்சியின் 40 வேட்பாளர்களும் ஒரே மேடையில் அறிமுகம் செய்து வைத்தது பேசுபொருளாகியது. இந்நிலையில், சீமான் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில் பேசிய சில பேச்சுகள் அடுத்தடுத்து சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகி வருகிறது.
அறிமுக கூட்டத்தில் அவர் பேசுகையில், சீதாலட்சுமி ஈரோடு தொகுதியில் நிற்க வேண்டியவர். அடம்பிடித்து திருப்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார். திருப்பூர் தொகுதியில் வேறு ஒரு தங்கையைத்தான் நிறுத்த முடிவு செய்திருந்தோம்.
சீமானின் கட்டளை
திருப்பூர் தொகுதியில் சீதாலட்சுமி போட்டியிட்டு ஜெயிக்கவில்லை எனில் செத்துரு என சொல்லி இருக்கிறேன். கொன்றே போடுவேன்னு சொல்லி இருக்கிறேன்.
ஜெகதீஷ் கிட்ட எல்லாம் ஜெயிக்கலைன்னா ஏற்காடு மலையில் இருந்து குதிச்சுடுன்னு சொல்லி இருக்கிறேன். நானும் வாரேன்.. சேர்ந்தே குதிப்போம்னு சொல்லி இருக்கிறேன். அப்படிப்பட்ட ஒரு நிலையில் நாம் நிற்கிறோம்.
எப்பாடுபட்டவாது நாம் வெல்ல வேண்டும். எங்களுக்கு வாக்களிக்காமல் நாதியற்றவர்களாக்கிவிடாதீர்கள்.. எங்களுக்கு வாக்களிப்பது என்பது உங்களது நன்மைக்காக; உங்களுக்காகத்தான், என்று பேசியுள்ளார்.
முன்னதாக போட்டியிட விருப்பமே இல்லாத வேட்பாளர்களை தேர்தல் களத்தில் கட்டாயப்படுத்தி நிறுத்தியிருப்பதாக சீமான் பேசியது பெரும் சர்ச்சையான நிலையில், தற்போது சீமானின் 'செத்துவிடு' அன்பு கட்டளையும் விவாதத்துக்குரியதாக மாறியுள்ளது.