சாம்சங் ஊழியர் போராட்டம்; கடைசி வரை உங்களுடன் நிற்பேன் - சீமான்
சாம்சங் ஒப்பத்தில் தொழிலாளர்களின் உரிமைகளை சேர்த்தால் என்ன என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
சாம்சங் போராட்டம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் சாம்சங் தொழிற்சாலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஒரு மாதமாக தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர்.
இதனையடுத்து அரசு தரப்பில் பேச்சு வார்த்தை நடத்தியும் போராட்டம் முடிவுக்கு வரவில்லை. இதனையடுத்து போராட்ட பந்தலை பிரித்த காவல்துறை, நள்ளிரவில் ஊழியர்களின் வீடுகளுக்கு சென்று கைது செய்தது.
சீமான் ஆதரவு
இதன் பின் திமுக கூட்டணியில் விசிக, சிக தலைவர் திருமாவளவன், காங்கிரஸ் மூத்த தலைவர் தங்கபாலு, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பால கிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் போராடும் ஊழியர்களை சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர்.
இந்நிலையில் இன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போராட்டம் நடத்தி வரும் ஊழியர்களை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார்.
அவர்களின் முன்னிலையில் பேசிய சீமான், சாம்சங் நிறுவனத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும் அரசு, போராடும் தொழிலாளர்களின் நலனையும் கருத்தில் கொள்ள வேண்டும். பன்னாட்டு நிறுவனங்களுடனான ஒப்பந்தத்தில் தொழிற்சங்கம் அமைக்க உரிமை இல்லை என்று கூறுகின்றனர். இந்த மண்ணின் நிலங்களை, நீரை, மின்சாரத்தை எவ்வளவு வேண்டமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
10 லட்சம் கோடி முதலீடு
மின்வெட்டு ஏற்பட்டால் நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பை மத்திய, மாநில அரசுகள் ஈடுகட்டும் என்றெல்லாம் தொழில் நிறுவனங்களுக்கு சாதகமான ஒப்பந்தங்கள் போடப் படுகின்றன. அந்த ஒப்பத்தில் தொழிலாளர்களின் உரிமைகளை சேர்த்தால் என்ன?
கப்பலில் வணிகம் செய்ய வந்த ஆங்கிலேயனை எதிர்த்து போராடினோம். ஆனால் இன்று வானூர்தியில் வணிகம் செய்ய வருபவனை வரவேற்கிறோம். 10 லட்சம் கோடி முதலீடு கொண்டு வந்துள்ளதாக அமைச்சர் கூறுகிறார். இது நம்பும் படி உள்ளதா?
கடைசி வரை உறுதியாக நின்று தொழிலாளர்கள் போராட வேண்டும். உங்களின் வெற்றி அனைத்து தொழில் நிறுவனங்களின் தொழிலாளர்களுக்கும் ஒரு வழிகாட்டியாக இருக்கும். வளர்ச்சி என்ற பெயரில் தொழிலாளர்களின் உரிமை பலி கொடுக்க ஒரு போதும் அனுமதிக்க முடியாது. உங்கள் போராட்டத்துக்கு உறுதியாக நானும், நாம் தமிழர் கட்சியும் கடைசி வரை நிற்போம்" என பேசினார்.