பாஜக இல்லையென்றால் திமுக எப்பவோ அழிஞ்சிருக்கும் - சீமான் அட்டாக்
பாஜக இல்லையென்றால் திமுக என்ற கட்சி அழிந்து 20 வருடம் ஆகியிருக்கும் என சீமான் தெரிவித்துள்ளார்.
உங்களுடன் ஸ்டாலின்
சென்னையில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
“உங்களுடன் ஸ்டாலின் சரி, இவ்வளவு நாட்கள் அவர் யாருடன் இருந்தார்? மக்களுடன் இல்லையா? இந்த கேள்விக்கு யாரிடம் பதில் உள்ளது. இப்போது வீடு தேடி அரசு போகிறது. இவ்வளவு நாட்கள் யாரைத் தேடி அரசு போனது?
பாஜக என்று ஒன்று இல்லையென்றால் திமுக என்ற கட்சி அழிந்து 20 வருடம் ஆகியிருக்கும். தனக்கெதிராக திரண்டு வந்து போராட்டம் நடத்தும் பெண்ணிய அமைப்புகள் சகோதரி ரிதன்யா தற்கொலை விவகாரத்தில் வாய்திறக்காமல் இருப்பது ஏன்?
சீமான் காட்டம்
ரிதன்யா விவகாரத்தில் மகளிர் அமைப்புகள் கஞ்சா சாப்பிட்டு தூங்கி விட்டனரோ? எனக்கு எதிராக மாதர் சங்கம் மண்டியிட்டு மனு கொடுத்து, முறையீடும், போராடும். வாழ வேண்டிய ரிதன்யா, வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளார்.
அதற்காக பேசிய மாதர் சங்கங்கள், மகளிர் அமைப்புகள், மனித உரிமை ஆர்வலர்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், பெண்ணியவாதிகள் எல்லாம் எங்கே போய் படுத்துள்ளீர்கள். தேவை என்றால் வாய் திறப்பீர்கள், தேவை இல்லை என்றால் வாய் திறக்க மாட்டீர்கள்” என கூறியுள்ளார்.