பொது சிவில் சட்டத்தால் நாடு பிளவுபடும், ஒற்றுமை வேறு ஒற்றைமயமாக்கல் வேறு - சீமான் காட்டம்!

Narendra Modi Seeman
By Vinothini Jul 14, 2023 05:34 PM GMT
Report

 பிரதமர் மோடி வலியுறுத்தும் பொது சிவில் சட்டத்தை எதிர்த்து சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பொது சிவில் சட்டம்

2024-ல் லோக் சபா தேர்தலுக்கு முன்னதாக பொது சிவில் சட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்த பிரதமர் மோடி தீவிரமாக வலியுறுத்தி வருகிறார். 2018-ல் இதே மத்திய அரசின் 21-வது சட்ட ஆணையம் பொது சிவில் சட்டம் தேவையில்லை எனக் கூறிய பிறகும், தற்போது இதற்கென்று 22-வது சட்ட ஆணையத்தை அமைத்து மக்களிடம் கருத்துக் கேட்பு நடத்தி முடித்திருக்கிறது.

seeman-opposes-uniform-civil-code

இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், "நாட்டின் பன்முகத்தன்மைக்கு எதிரான பொது உரிமையியல் சட்டத்தை ஒருபோதும் நடைமுறைப்படுத்த விட மாட்டோம்" என கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

சீமான் வெளியிட்ட அறிக்கை

இந்நிலையில், அவர் வெளியிட்ட அறிக்கையில், "இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு பொது உரிமையியல் (சிவில்) சட்டம் என்ற பெயரில் நாட்டினைப் பிளவுபடுத்தத் துடிப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. மாற்று மத மக்களைக் குறிவைக்கும் மதவாத இயக்கமான ஆர்எஸ்எஸ் இலக்குகளில் ஒன்றான பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்தி, நாட்டின் ஒருமைப்பாட்டையும், பன்முகத்தன்மையையும் குழிதோண்டிப் புதைக்க மோடி அரசு முயல்வது எதேச்சதிகாரப்போக்கின் உச்சமாகும்.

seeman-opposes-uniform-civil-code

ஒற்றுமை (Unity) என்பது வேறு; ஒற்றைமயமாக்கல் (uniformity) என்பது வேறு. மதச்சார்பின்மையும், பன்முகத்தன்மையும் இந்த நாட்டின் ஆணி வேர்கள். பல்வேறு மொழி பேசும் தேசிய இனங்கள், பல்வேறு வழிபாட்டு முறைகளைப் பின்பற்றும் மதங்கள் என அனைத்தையும் ஏற்றுக்கொண்டு அரவணைத்து வேற்றுமையில் ஒற்றுமை காணும் சிறப்பே இந்நாட்டினை 75 ஆண்டுகளுக்கும் மேலாக நிலைத்து நிற்கச் செய்கிறது.

ஆனால், பொது சிவில் சட்டம் மூலம் அதன் ஆணிவேரில் வெந்நீர் ஊற்றும் வேலையை பாஜக அரசு கைவிடாவிட்டால் மிகக் கடுமையான எதிர் விளைவுகளை இந்நாடு சந்திக்க நேரிடும். ஆகவே, இந்திய ஒன்றியத்தை ஆளும் மோடி தலைமையிலான பாஜக அரசு பொது சிவில் சட்டம் என்ற பெயரில் நாட்டினைப் பிளவுபடுத்த முயல்வதை உடனடியாக கைவிட வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.