பைக், கார் தரேனு சொல்றதுக்கு நான் என்னபிக்காளி பையலா? விஜய்யை விளாசிய சீமான்!
விஜய்யால் அம்பேத்கர் போட்டோவை மட்டுமே தர முடியும் என சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார்.
விஜய் அரசியல்
பரமக்குடி தனியார் மகாலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 76 வது பிறந்த நாள் எழுச்சி விழா கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய சீமான், “சிவன் ஆட்டத்தை பார்த்து இருப்பீர்கள், அதையும் சினிமாவில் தான் பார்த்திருப்பீர்கள், சீமானின் ஆட்டத்தை இந்த களத்தில் பார்ப்பீர்கள்.
எனது ஆட்சியில் பசி இல்லாத நாடு, அனைவருக்கும் வேலை, மருத்துவம், படிப்பை எப்படி கொடுத்துள்ளேன் என காண்பிப்பேன். மோட்டர் பைக் தருகிறேன், கார் தருகிறேன் என கூறுவதற்கு நான் என்ன பிக்காளி பையலா? வீட்டுக்கு ஒரு கார் தருகிறேன் என கூறியுள்ளார் விஜய்.
வெற்றி பெற்றதற்கு பிறகு பொதுமக்கள் கேள்வி கேட்டால் அனைவரின் வீட்டிற்கும் அம்பேத்கர் போட்டோவை அனுப்பி வைப்பார். இதில் கார் உள்ளது என கூறுவார். அண்ணல் அம்பேத்கர் தான் உலகின் சிறந்த கார் என கூறுவார்.
சீமான் விளாசல்
வரும் தேர்தலில் ஒன்று ஆட்சி அமைப்பேன், இல்லை என்றால் என் தயவு இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது. பிப்ரவரியில் தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது, இந்த நிலையில் செங்கோட்டையன் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது அரசியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது.

அதிமுகவில் கட்சி பதவி தேவை இல்லை என்பதால் அவர் வேறு கட்சிக்கு செல்லலாம். நான் ஆசிரமங்கள், மடங்களில் இருந்து வரவில்லை, நான் ஒரு காட்டன், எங்களை கொஞ்சம் கொஞ்சமாக பக்குவப்படுத்தி மேலே ஏறி வந்துள்ளோம். செய்தியாளர்கள் நல்ல கேள்விகளை கேட்டால் நல்ல பதிலை நான் சொல்லுவேன்.
அழகான கேள்வியின் குழந்தை தான் நல்ல பதில். கோவப்படாமல் இருந்திருந்தால் நான் கோடம்பாக்கத்தில் இருந்து நல்ல படங்கள் எடுத்து பிழைத்திருப்பேன். கோபம் தான் என்னை இங்கு கொண்டு வந்து நிறுத்தி உள்ளது. காலிமதுபாட்டில்களை திரும்ப வாங்குவது என்பது கொடுமையானது.
டாஸ்மாக்கில் வியாபாரம் நல்லபடியாக நடக்கவில்லை என்றால் டாஸ்மாக் ஊழியர்களே குடித்து தீர்த்து விடுங்கள் என்ற நிலைமை வந்தாலும் வரும்” என தெரிவித்துள்ளார்.