இதென்ன சத்திரமா? எல்லா நாடுகளும் இதேபோல் கேட்டால் என்னவாகும் - சீமான் வேதனை
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றமும், மனவலியும் அளிக்கிறது என சீமான் தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்ற தீர்ப்பு
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இனவெறி சிங்கள ஆட்சியாளர்களால் ஈழத்தாயகத்தில் நிகழ்த்தப்பட்ட கொடுந்தாக்குதலிருந்து தப்பி உயிர்வாழ தமிழ்நாட்டில் தஞ்சம் அடைந்து,
பல ஆண்டுகளாக வாழ்ந்து வரும் ஈழத்தமிழ்ச்சொந்தங்களுக்கு குடியுரிமை வழங்க உத்தரவிடக்கோரிய மனுவினை இந்திய உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. 'இந்திய நாட்டில் குடியுரிமை கேட்க உங்களுக்கு இங்கே என்ன உரிமை இருக்கிறது?
வேறு நாட்டிற்கு செல்லுங்கள்! என்ற உச்சநீதிமன்றத்தின் வார்த்தைகள் மிகுந்த மனவலியைத் தருகிறது. சீன நாட்டின் ஏதோ ஒரு மூலையிலிருந்து வந்த திபெத்தியர்களுக்கு இங்கு வாழும் உரிமை உண்டு. இந்திய நாடு அவர்களுக்கு எண்ணற்ற வசதிகளைச் செய்து வாழ்விக்கும்போது, அவர்களை நோக்கி எழுப்பப்படாத இது என்ன சத்திரமா? என்ற கேள்வி,
சீமான் வருத்தம்
எம் ஈழத்தமிழ்ச்சொந்தங்கள் குடியுரிமை கேட்கும்போது எழுவது ஏன்? இதே கேள்வியை பாகிஸ்தானிடமிருந்து வருகின்ற இந்துக்களிடமோ, சீனாவின் திபெத்தியர்களிடமோ கேட்டுவிடத்தான் முடியுமா? அடிமைப்படுத்தி ஆண்ட பல ஐரோப்பிய நாடுகள் கூட அடைக்கலம் தேடி ஏதிலிகளாய் வந்த ஈழத்தமிழர்கள், இந்தியாவின் சீக்கியர்கள் உள்ளிட்ட இலட்சக்கணக்கான ஆதரவற்ற உலக மக்களை அள்ளி அரவணைத்து குடியுரிமை முதல் விளையாட்டு,
அரசியல் உள்ளிட்ட பலதுறைகளில் பங்கேற்க அனுமதியும் வழங்குகின்றதே? அவர்களை விடவும், தங்கள் தந்தையர் நாடென நம்பி வந்த ஈழத்தமிழ் மக்களைக் காக்க வேண்டிய அதிக பொறுப்பும் - கடமையும் வரி செலுத்தி, வாக்கு செலுத்தி நான் நேசித்து நிற்கும் இந்நாட்டிற்கு இருக்கிறதா? இல்லையா?
'வேறு நாட்டிற்கு செல்லுங்கள்' என்கிறீர்கள். உலகில் உள்ள எல்லா நாடுகளும் இதேபோல் சத்திரமா? என்று கேள்வி எழுப்பினால் அகதியான மக்கள் எங்கே சென்று வாழ்வது? இதில் எங்கே இருக்கிறது மனித உரிமை? எங்கே இருக்கிறது மானுட அறம்? புத்தனும், காந்தியும் போதித்தது இதைத்தானா? அசோகரின் தர்மசக்கரத்தைக் கொடியிலும், காந்தியை தேச பிதாவாகவும் கொண்டிருக்கும் நாடு இப்படி செய்வது முறைதானா?
இதுதான் இந்த நாட்டின் சட்டம், நீதி என்றால் அதில் எங்கே இருக்கிறது மானுட நேயம்? இத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்திருந்தால் நேபாளத்தில் பிறந்த புத்தர் புத்த கயாவிற்கும், குஜராத்தில் பிறந்த காந்தி தென்னாப்பிரிக்காவிற்கும் சென்றிருக்கத்தான் முடியுமா? ஈழத்தமிழருக்கும் இந்திய நாட்டிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றால் ஈழத்தாயக விடுதலை போராட்டத்தை அழித்தொழிக்க இந்தியப் பெருநாடு அமைதிப்படையை அனுப்பியதுதான் ஏன்? என்ற கேள்விக்கு
இந்த நாட்டில் எந்த நியாயவான்களிடம் பதிலுண்டு? ஆகவே, கோடிக்கணக்கான ஏழை மக்களின் இறுதி நம்பிக்கையாய் திகழும் இந்திய உச்சநீதிமன்றம் ஈழத்தமிழ்ச்சொந்தங்களுக்கு முற்று முழுதாக குடியுரிமை வழங்க முடியாது என்ற தனது தீர்ப்பினை மறுசீராய்வு செய்து, குறைந்தபட்சம் தற்காலிக சிறப்பு குடியுரிமை அல்லது இரட்டை குடியுரிமை வழங்க அரசிற்கு உத்தரவிட்டு தமிழர்களின் மனவலியைப் போக்கிட வேண்டுமென வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.