11A சீட்டிற்கு முண்டியடிக்கும் பயணிகள் - ஆனால், உண்மை என்ன தெரியுமா?
11A சீட்டிற்கு டிமாண்ட் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
11A சீட்
கடந்த வாரம் குஜராத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் 11ஏ சீட்டில் அமர்ந்திருந்த ஒரே ஒரு பயணி மட்டுமே உயிர் பிழைத்தார். இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்தனர்.
இதற்கிடையே உயிர் பிழைத்த விஸ்வஷ்குமார் ரமேஷ்(40) என்ற நபர் அமர்ந்திருந்த 11A இருக்கை தான் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. தொடர்ந்து அந்த குறிப்பிட்ட இருக்கைக்கு இந்தியப் பயணிகளிடையே அதிக டிமாண்ட் ஏற்பட்டுள்ளது. சிலர் அந்த இருக்கைக்காகக் கூடுதல் கட்டணம் செலுத்தவும் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.
உண்மை என்ன?
இந்நிலையில் இதுகுறித்து வல்லுநர்கள் கூறுகையில், விமானங்களில் இருக்கை அமைப்பு என்பது ஒவ்வொரு விமானத்தைப் பொறுத்தும் மாறுபடும். விமான விபத்துகள் ஒவ்வொன்றும் தனித்துவமானவை. உயிர் பிழைப்பது என்பது பல காரணங்களைச் சார்ந்து இருக்கும்.
எனவே, ஒரு விபத்தில் ஒருவர் குறிப்பிட்ட சீட்டில் உட்கார்ந்ததால் உயிர் பிழைத்தார் என்றால் அதே சீட் எப்போதும் பாதுகாப்பாக இருக்கும் எனச் சொல்ல முடியாது. இந்தியாவில் ஏர்பஸ் மற்றும் போயிங் விமானங்களின் பல மாடல்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அதில் போயிங் 787-8 ட்ரீம்லைனர் என்ற குறிப்பிட்ட மாடலில் மட்டுமே 11ஏ சீட் எமர்ஜென்சி இருக்கைக்கு அருகே வரும். மற்ற மாடல்களில் அவை எமர்ஜென்சி இருக்கைக்கு அருகே இருக்குமா என்பது உறுதியாகத் தெரியாது என்கின்றனர். அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில், பின் சீட்டில் இருப்போரே அதிகபட்ச பாதுகாப்பை விபத்து சமயத்தில் பெறுகிறார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.