பள்ளி மாணவிகள் 80 பேருக்கு விஷம் வைப்பு - ஆப்கானிஸ்தானில் நடக்கும் கொடூரம்
ஆப்கானிஸ்தானில் பள்ளிகளில் விஷம் வைக்கப்பட்ட சம்பவத்தில் 80 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளி மாணவிகளுக்கு விஷம் வைப்பு
ஆப்கானிஸ்தான் நாட்டில் வடக்கே சர்-இ-புல் மாகாணத்தில் சாங்சரக் மாவட்டத்தில் இரு வேறு பள்ளிகளில் 1 முதல் 6-ம் வகுப்பு வரை படிக்கும் 80 மாணவிகள் வரை விஷம் வைத்ததில் பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து பாக்ஸ் நியூஸ் வெளியிட்டுள்ள செய்தியில், அந்த மாகாண கல்வி துறை இயக்குநர் முகமது ரஹ்மானி கூறும் போது,
நஸ்வான்-இ-கபோத் ஆப் பள்ளியில் 60 குழந்தைகளும் மற்றும் நஸ்வான்-இ-பைசாபாத் பள்ளியில் 17 குழந்தைகளும் விஷம் வைத்ததில் பாதிக்கப்பட்டனர்.
மாணவிளுக்கு விஷம் வைக்கப்பட்டது எப்படி?
இரு பள்ளிகளும் அருகருகே உள்ளது. இந்த பள்ளிகளை குறிவைத்து இந்த சம்பவம் நடந்துள்ளது. நாங்கள் அனைத்து மாணவிகளையும் மருத்துவமனையில் சேர்த்து விட்டோம். அவர்கள் அனைவரும் நலமுடன் உள்ளனர் என கூறியுள்ளார்.
கல்வி துறை விசாரணையை நடத்தியுள்ளது. அதில் 3-வது நபருக்கு பணம் கொடுத்து கொடூர தாக்குதலை நடத்த சிலர் திட்டமிட்டு உள்ளனர் என தெரிகிறது என ரஹ்மானி கூறியுள்ளார்.
இருந்த போதிலும் மாணவிகளுக்கு எப்படி விஷம் வைக்கப்பட்டது. அவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு விவரங்கள் என்னென்ன? என்பது பற்றிய தகவல்களை அவர் வெளியிடவில்லை என பாக்ஸ் நியூஸ் தெரிவித்துள்ளது.