பள்ளி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி - அரசாணையை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு
தமிழகத்தில் 9ம் வகுப்பு முதல் 11ம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களும் வெற்றி பெற்றதாக அறிவித்த அரசாணையை ரத்து செய்ய மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், 11ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு தனி தேர்வு நடத்திக் கொள்ள தனிப்பட்ட பள்ளிகளுக்கு அனுமதியளித்து உத்தரவிட்டிருக்கிறது.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக, 9ம் வகுப்பு முதல் 11ம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்து தமிழக பள்ளிக்கல்வித் துறை கடந்த பிப்ரவரி 25ம் தேதி அரசாணை பிறப்பித்திருந்தது. இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி ஆசிரியர் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, பொது தேர்வு நடத்தவில்லை என்றாலும், பள்ளிகள் அளவில் தேர்வு நடத்தப்பட வேண்டும் எனவும், அப்போது தான் 11ம் வகுப்பில் சேரும் போது மாணவர் விரும்பும் பாடத்திட்டத்தை சேர்க்கை வழங்க முடியும் என மனுதாரர் தரப்பில் வாதாடப்பட்டது. மேலும், தேர்வுகள் ரத்து செய்வது தொடர்பாக எந்த கலந்தாலோசனையும் மேற்கொள்ளவில்லை.
தேர்தலை கருத்தில் கொண்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக குறை கூறப்பட்டுள்ளது. இந்த வாதத்தைக் கேட்ட நீதிபதிகள், பொதுநலன் சார்ந்த விஷயங்களில் அதிகாரிகள் உரிய ஆலோசனைகளுக்கு பிறகே முடிவுகள் எடுப்பர் எனவும், எந்த கலந்தாலோசனையும் மேற்கொள்ளவில்லை என்ற வாதத்தை ஏற்க முடியாது எனவும் தெரிவித்து, அரசாணையை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்துவிட்டார்கள்.
அதே சமயம், 10ம் வகுப்பில் இருந்து 11ம் வகுப்புக்கு செல்லும் மாணவர்கள், விருப்ப பாடத்தை தேர்வு செய்யும் வகையில், அவர்களின் தகுதியை கண்டறிய பள்ளிகள், தேர்வு நடத்திக் கொள்ளலாம் எனவும் இது சம்பந்தமாக பள்ளிக்கல்வித் துறை உரிய விதிகளை அறிவிக்க வேண்டும் என உத்தரவிட்டது.