விஷம் குடித்து பள்ளிக்கு வந்த மாணவன் உயிரிழப்பு - எரிக்கப்பட்ட பள்ளிப் பேருந்துகள்
பள்ளி மாணவன் விஷம் குடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கண்டித்த ஆசிரியர்?
நெல்லை, மானாபரநல்லூர் வடக்கு தெருவை சேர்ந்தவர்கள் சங்கரகுமார் - முத்துலட்சுமி தம்பதி. இவர்களின் மகன் சபரிகண்ணன்(15). இவர் வீரவநல்லூரில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.
மாணவனை பள்ளி ஆசிரியர்கள் கண்டித்து, பள்ளிக்கு வரும்போது பெற்றோருடன் வரவேண்டும் என அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து பள்ளியின் நுழைவு வாயில் அருகே வந்த சபரிகண்ணன்,
தான் மறைத்து வைத்திருந்த வயலுக்கு பயன்படுத்தும் களைக்கொல்லி மருந்தை எடுத்து குடித்துவிட்டு பள்ளிக்குள் சென்றுள்ளார். இதனையடுத்து காலை வழிபாடு நடக்கும் போது மயங்கி விழுந்த நிலையில் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மாணவன் தற்கொலை
அங்கு 10 நாட்கள் சிகிச்சையில் இருந்த சபரி கண்ணன் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்து விட்டார். இந்நிலையில், காவல்நிலையத்திற்கு முன்பு மாணவனின் உடலோடு 200க்கும் மேற்பட்ட உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், திருநெல்வேலி பாபநாசம் சாலையில் 20 நிமிடம் பாதிப்பு ஏற்பட்டது. பின் போலீஸார் அவர்களை சமாதானப்படுத்திய நிலையில், நடவடிக்கை எடுப்பதாக கூறி அவர்களை அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையில் இறந்த மாணவனின் உறவினர்கள் பள்ளியின் இரண்டு வாகனங்களை எரித்தாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.