இபிஎஸ் வழக்கு - நாடெங்கிலும் எதிர்க்கட்சி தலைவர்கள் வழக்கை எதிர்கொள்கிறார்கள் - உச்சநீதிமன்றம்
நெடுஞ்சாலைத்துறை டெண்டரில் ரூ.4800 கோடி அளவில் முறைகேடு நடந்ததாக எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு இன்று உச்சநீதிமன்றம் அதிரடியான கருத்துக்களை தெரிவித்துள்ளது.
வழக்கின் பின்னணி
2016 முதல் 2021-ஆம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில் நெடுஞ்சாலை துறை இலாகாவை கவனித்த அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது 4,800 கோடி ரூபாய் டெண்டர் முறைகேடு வழக்கினை கடந்த 2018-ஆம் ஆண்டில் திமுகவின் அமைப்பு செயலாளரான ஆர் .எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், முதற்கட்ட விசாரணையில் முறைகேடு நடந்ததற்கான முகாந்திரம் ஏதும் இல்லை என லஞ்ச ஒழிப்பு துறை அறிக்கை அளித்தும், இந்த முறைகேடு புகார் குறித்து சிபிஐ விசாரணை நடத்தும்படி உத்தரவிட்டிருந்தது.
இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மேல்முறையீடு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ததுடன், இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் விசாரித்து முடிவெடுக்க வேண்டுமென உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து, வழக்கை மீண்டும் விசாரித்த உயர்நீதிமன்றம், ஜூலை மாதம் அளித்த தீர்ப்பில், ஆர்.எஸ். பாரதியின் மனுவை டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டது. இதையடுத்து எடப்பாடி பழனிசாமி மீதான 4800 கோடி ரூபாய் டெண்டர் முறைகேடு விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் அப்பீல் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதிரடியாக கருத்து சொன்ன உச்சநீதிமன்றம்
இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், நாடு முழுவதிலுமுள்ள எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரும் வழக்குகளை எதிர்கொள்கிறார்கள் என தெரிவித்த உச்சநீதிமன்றம், ஆளுங்கட்சியினர் யாரும் வழக்குகளை சந்திப்பதில்லை என கருத்து தெரிவித்துள்ளது.
நீதிமன்றத்தில் இருந்து அரசியல் விவரங்களை தள்ளிவையுங்கள் என லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தி, புகார்தாரர்கள் உள்ளிட்ட மற்ற தரப்பினருக்கு வழக்கின் விவரங்களை பகிர்ந்துகொள்ள அறிவுறுத்தி, எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கின் விசாரணையை அக்டோபர் 17-ஆம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.