சசிகலாவின் துரோகிகள் எங்கள் குடும்பத்தில் தான் இருக்கிறார்கள்: திவாகரன்
சசிகலாவின் முடிவை முழுமனதோடு வரவேற்கிறேன் என்றும், சசிகலாவின் துரோகிகள் வெளியில் இல்லை, எங்கள் குடும்பத்தில்தான் இருக்கிறார்கள் எனவும் நீயூஸ் 18க்கு அளித்த பிரத்யேக பேட்டியில் சசிகலாவின் சகோதரர் திவாகரன் கூறியுள்ளார். ஜெயலலிதாவுடன் கால் நூற்றாண்டுக்கு மேல் தேர்தல் கூட்டணி, வியூகத்தில் முக்கிய பங்காற்றிய சசிகலா தற்போது களத்தை விட்டு விலகியிருப்பது அரசியல் களத்தில் அதிர்ச்சியையும் பல்வேறு யூகங்களையும் கிளப்பியுள்ளது.
இதுகுறித்து சசிகலாவின் சகோதரரும், அண்ணா திராவிடர் கழகப் பொதுச் செயலாளருமான திவாகரன் நீயூஸ் 18 க்கு அளித்த பிரத்யேக பேட்டியில், சசிகலா ஒரு வீராங்கனை. சரியான நேரத்தில் போர்க்களத்திலிருந்து பின்வாங்கியதைப் போல் இந்த முடிவை அறிவித்துள்ளார். இதற்கு காரணம் அவரை துரோகிகள் முதுகில் குத்த உள்ளதை அறிந்து இந்த முடிவை எடுத்துள்ளார்.
சசிகலாவின் முடிவை முழு மனதாக வரவேற்கிறேன். துரோகிகள் வெளியில் இல்லை. எங்கள் குடும்பத்தில்தான் இருக்கிறார்கள். அவரைச் சுற்றியுள்ள டிடிவி தினகரன் உள்ளிட்டோரால்தான் சசிகலா இந்த முடிவை எடுத்துள்ளார். அவர் அரசியலுக்கு வருவதை விட அவருடைய உடல் நலனே முக்கியம்.
டிடிவி தினகரன் தன்னை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்துக் கொண்டதும், அமமுக தலைமையிலான கூட்டணியில் அதிமுக வரவேண்டும் என்று தினகரன் தெரிவித்ததும் சிறுபிள்ளைத் தனமானது. சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது குறித்து முயற்சிகள் ஒருபக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, தினகரன் பேசியது இணைப்பு முயற்சியில் ஈடுபட்ட அதிமுகவினரின் கோபத்தை அதிகரித்திருக்கும்.
இது கூட சசிகலாவின் அறிவிப்பிற்கு காரணமாக இருக்கலாம். சசிகலா அவர்களின் விருப்பப்படி அதிமுக வெற்றிக்கு அனைவரும் பாடுபட வேண்டும். இதுவே எனது விருப்பமும்” என்றார்.
- News 18 Tamilnadu