சென்னையில் இருந்து திடீரென புறப்பட்ட சென்ற சசிகலா- காரணம் என்னவாக இருக்கும்?
சென்னை தி.நகரில் தங்கியிருந்து ஓய்வெடுத்து வந்த சசிகலா திடீரென அங்கிருந்து புறப்பட்டு சென்றிருக்கிறார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். அதனையடுத்து, சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிகலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து கடந்த ஜனவரி மாதம் 27ம் தேதி விடுதலையானார். ஆனால், மருத்துவர்களின் அறிவுரைப்படி பெங்களூருவில் ஒருவாரகாலம் தங்கியிருந்த சசிகலா, கடந்த மாதம் 8ம் தேதி சென்னை திரும்பினார்.
பெங்களூருவிலிருந்து சென்னைக்கு வரும் வழியில் தொண்டர்கள் மத்தியில் பேசிய சசிகலா, தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாகவும், மக்களை விரைவில் சந்திப்பேன் என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார். அடக்கு முறைக்கு நான் அடிபணிய மாட்டேன் என்றும் அப்போது சசிகலா தெரிவித்தார். சுமார் 24 மணி நேர பயணத்துக்கு பின்னர் சென்னை வந்த சசிகலா, தி.நகரில் உள்ள இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியா வீட்டில் தங்கியிருந்து ஓய்வெடுத்து வந்தார்.
யாரையும் சந்திக்காமல் இருந்த சசிகலா, ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24ம் தேதி மட்டும் சில முக்கிய பிரமுகர்களை சந்தித்தார். அதனைத்தொடர்ந்து, யாரும் எதிர்பாரா விதமாக அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பதாக சசிகலா அதிரடியாக அறிவித்தார். அதில், “நான் அரசியலை விட்டு ஒதுங்கியிருந்து அம்மாவின் ஆட்சி அமைய ஜெயலலிதாவிடமும், இறைவனிடமும் வேண்டிக் கொண்டிருப்பேன் என்றார். சசிகலாவின் வருகைக்குப் பிறகு பல்வேறு அரசியல் மாற்றங்கள் நிகழும் என்று கூறி வந்தவர்களுக்கு இது சற்று அதிர்ச்சியாகவே இருந்தது.
பாஜகவின் அழுத்தம் காரணமாகவே அவர் அரசியலிலிருந்து ஒதுங்கியிருக்கும் முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியானது. சில மாதங்களுக்கு பிறகு மீண்டும் அவர் அரசியல் பிரவேசம் செய்வார் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில், ஒரு வார பயணமாக சென்னையிலிருந்து சசிகலா திடீரென தஞ்சாவூர் புறப்பட்டு சென்றார்.
கடந்த பிப்ரவரி மாதம் சென்னை வந்தபின் முதன் முறையாக சசிகலா தஞ்சை பயணம் மேற்கொண்டிருக்கிறார்.
இதுகுறித்து அவருக்கு நெருக்கமான வட்டாரங்களில் விசாரித்த போது, தஞ்சையில் உள்ள தனது உறவினர்களை சந்திக்க அவர் சென்றுள்ளதாகவும், தஞ்சாவூரில் சில நாட்கள் தங்கியிருந்து அவர் ஓய்வெடுக்க உள்ளார் என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.