விடைபெற்ற சகாப்தம் - என். சங்கரய்யாவின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவரும், சுதந்திர போராட்ட தியாகியுமான சங்கரய்யாவின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
என். சங்கரய்யா மறைவு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவரும், சுதந்திர போராட்ட தியாகியுமான என். சங்கரய்யா நேற்று காலமானார். அவருக்கு வயது 102. இரண்டு நாட்களுக்கு முன் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அவரது உயிர் பிரிந்தது.
இந்நிலையில் சங்கரய்யாவின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக குரோம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு அரசியில் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று சங்கரய்யாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். மேலும், தியாகி சங்கரய்யாவுக்கு அரசு மரியாதையுடன் பிரியாவிடை அளிக்கப்படும்' என்று மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அரசு மரியாதையுடன் தகனம்
இந்நிலையியல் சங்கரய்யாவின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்கு பிறகு இன்று காலை 10.30 மணியளவில் கட்சி அலுவலகத்தில் இருந்து ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஊர்வலமாக பெசன்ட் நகர் மின் மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
இறுதி ஊர்வலம் பெசன்ட் நகர் மின் மயானம் சென்றடைந்ததும் சங்கரய்யா உடலுக்கு இறுதி சடங்குகள் நடத்தப்பட்டன. இதில் அவரது குடும்பத்தினர் உள்பட மார்க்சிஸ்ட் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், அசோக் தவாலே, கேரள மாநில செயலாளர் கோவிந்தன், மேற்கு வங்காள மாநில செயலாளர் முகமது சலீம் உள்ளிட்ட அகில இந்திய அளவிலான தேசிய தலைவர்கள் கலந்து கொண்டனர். இதனையடுத்து சங்கரய்யாவின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.