சங்கரய்யாவுக்கு முனைவர் பட்டம்: குறுகிய மனம் படைத்த சிலரது சதியால் நடந்தேறாமல் போனது - முதலமைச்சர் வேதனை!
குறுகிய மனம் படைத்த சிலரது சதியால் என். சங்கரய்யாவுக்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்குவது நடந்தேறாமல் போனதை எண்ணி மனம் வருந்துகிறேன்" என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
என்.சங்கரய்யா மறைவு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவரும், சுதந்திர போராட்ட தியாகியுமான என். சங்கரய்யா காலமானார். அவருக்கு வயது 102. இரண்டு நாட்களுக்கு முன் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அவரது உயிர் பிரிந்தது.
இந்நிலையில் சங்கரய்யாவின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக குரோம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு அரசியில் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று சங்கரய்யாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். மேலும், தியாகி சங்கரய்யாவுக்கு அரசு மரியாதையுடன் பிரியாவிடை அளிக்கப்படும்' என்று மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "தகைசால் தமிழர், முதுபெரும் பொதுவுடைமைப் போராளி, விடுதலைப் போராட்ட வீரர் தோழர் என்.சங்கரய்யா மறைந்த செய்தியால், துடிதுடித்துப்போனேன்.
மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவர் நலம் பெற்றுவிடுவார் என்றே நம்பியிருந்த வேளையில், அவர் மறைந்த செய்தி அதிர்ச்சியையும் வேதனையையும் அளித்தது. மிக இளம் வயதிலேயே பொதுவாழ்க்கையில் ஈடுபட்டு, 102 வயது வரை நாட்டுக்காகவும், உழைக்கும் வர்க்கத்துக்காகவும், தமிழ் மண்ணுக்காகவும் வாழ்ந்து மறைந்த சங்கரய்யாவின் வாழ்க்கையும் தியாகமும் என்றென்றும் வரலாற்றில் நிலைத்து நிற்கும்.
மு.க. ஸ்டாலின் அறிக்கை
மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவராக இருந்தபோதே விடுதலை வேட்கையோடு மாணவர் சங்கச் செயலாளராகப் போராட்டங்களை முன்னெடுத்தவர். தன்னுடைய தேசியம் சார்ந்த செயல்பாடுகளால் பலமுறை சிறையில் அடைக்கப்பட்டு, படிப்பைத் துறந்தவர்.
இந்தியா விடுதலை பெறுவதற்கு 12 மணி நேரத்துக்கு முன்புதான் அவர் விடுதலை செய்யப்பட்டார். இப்படிப்பட்ட விடுதலைப் போராட்ட வீரருக்கு 2021-ம் ஆண்டு, சுதந்திர தினத்தை முன்னிட்டு நேரில் சென்று, `தகைசால் தமிழர்' விருதை வழங்கியது எனக்குக் கிடைத்த வாழ்நாள் பேறு. விருதோடு கிடைத்த பெருந்தொகையைக்கூட கொரோனா நிவாரண நிதிக்காக அரசுக்கு அளித்த சங்கரய்யாவின் மாண்பால், நெகிழ்ந்துபோனேன். சிறந்த சட்டமன்ற உறுப்பினராகவும் நினைவுகூரத்தக்க பணிகளை ஆற்றியவர். கலைஞரின் உற்ற நண்பராக விளங்கிய சங்கரய்யா, கலைஞர் மறைந்தபோது, அவரின் இறுதிப் பயணத்தைக் கண்டு கண்கலங்கிய காட்சி, இருவருக்குமான நட்பைப் பறைசாற்றியது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலும், அதன் பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலும் இருந்து அவர் நடத்திய போராட்டங்களும், தீக்கதிர் நாளேட்டின் முதல் பொறுப்பாசிரியர் முதலிய பல்வேறு பொறுப்புகளில் ஆற்றிய அரசியல் செயல்பாடுகளும், தமிழ்நாட்டின் பொதுவுடைமை இயக்க வரலாற்றில் அவரின் தவிர்க்க முடியாத ஆளுமையை வெளிக்காட்டும்.
பொதுத் தொண்டே வாழ்க்கை என வாழ்ந்த செஞ்சட்டைச் செம்மலுக்கு, மதுரை காமராசர் பல்கலைக்கழகம் மூலமாக கௌரவ முனைவர் பட்டம் வழங்க ஆவண செய்யப்படும் என இந்த ஆண்டு ஜூலை 15 அன்று நான் அறிவிப்பு செய்திருந்தும், தமிழ்நாட்டின் விடுதலைப் போராட்ட வரலாற்றை அறியாத குறுகிய மனம் படைத்த சிலரது சதியால் அது நடந்தேறாமல் போனதை எண்ணி, இவ்வேளையிலும் மனம் வருந்துகிறேன். தகைசால் தமிழர், முனைவர் மட்டுமல்ல... அவற்றுக்கும் மேலான சிறப்புகளுக்கும் தகுதிவாய்ந்த போராளிதான் சங்கரய்யா. சிறப்புகளுக்கு அவரால் சிறப்பு என்று சொல்லத்தக்க அப்பழுக்கற்ற தியாக வாழ்வுக்குச் சொந்தக்காரர் அவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களுக்கும், தமிழ்நாட்டுக்கும் அவரின் மறைவு எப்போதும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.
அவரது அனுபவமும் வழிகாட்டலும் இன்னும் சில ஆண்டுகள் கிடைக்கும் என எண்ணிக்கொண்டிருந்த எனக்கு, அவரின் மறைவு தனிப்பட்ட முறையிலும் பேரிழப்பு. சாதிய, வர்க்கம், அடக்குமுறை, ஆதிக்கம் ஆகியவற்றுக்கு எதிராக வாழ்நாளெல்லாம் போராடிய போராளி சங்கரய்யாவை இழந்து தவிக்கும் அவரின் குடும்பத்தினர், பொதுவுடைமை இயக்கத் தோழர்கள், பல்வேறு அரசியல் இயக்கங்களைச் சேர்ந்த நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். விடுதலைப் போராட்ட வீரராக, சட்டமன்ற உறுப்பினராக, அரசியல் கட்சித் தலைவராக அவர் தமிழ்நாட்டுக்கு ஆற்றிய தொண்டினைப் போற்றும்விதமாக அவரின் திருவுடலுக்கு அரசு மரியாதையுடன் பிரியாவிடை அளிக்கப்படும்' என மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.