கோலியால் பெரும் கவலை; இந்தியா அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும் - முன்னாள் வீரர் சாடல்!
விராட் கோலியின் ஃபார்ம் பற்றி கவலைப்படுவதை நிறுத்த வேண்டும் என சஞ்சய் மஞ்ரேக்கர் தெரிவித்துள்ளார்.
விராட் கோலி
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் 2024 விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் லீக் சுற்றை கடந்து சூப்பர் 8 சுற்றில் விளையாடி வரும் இந்திய அணி, தங்களது முதல் போட்டியில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது.
மேலும், வரும் ஜூன் 22-ம் தேதி வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. ஆனால், இந்த தொடரில் நட்சத்திர வீரர் விராட் கோலி சுமாரான ஃபார்மில் இருப்பது இந்திய அணிக்கும் ரசிகர்களுக்கும் கவலையை தந்துள்ளது. இதுவரை விளையாடிய போட்டிகளில் 1, 4, 0, 24 ரன்கள் மட்டுமே அவர் எடுத்துள்ளது ஏமாற்றமாக அமைந்துள்ளது.
சஞ்சய் மஞ்ரேக்கர்
இந்நிலையில் ரசிகர்களும், வல்லுநர்களும் விராட் கோலியின் ஃபார்ம் பற்றி கவலைப்படுவதை நிறுத்த வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது "விராட் கோலி ஃபார்மில் இருக்கிறாரா.. இல்லையா.. என்பதை பற்றி யோசிக்காமல் நாம் இந்திய கிரிக்கெட்டை பற்றி அதிகமாக சிந்திக்க வேண்டும். ஐபிஎல் தொடரில் சுனில் நரேன் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் அசத்துவதை போல் ஜஸ்ப்ரித் பும்ரா அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய 2 விதமான சூழ்நிலைகளிலும் செயல்பட்டு வருகிறார்.
உலகின் இதர தலைசிறந்த பவுலர்களுக்கும், பும்ராவுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருப்பதை நீங்கள் பார்க்க முடியும். இந்தியா தங்களது பிளேயிங் லெவனில் பும்ராவை வைத்திருப்பதற்கு அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.