தூய்மை பணியாளர்களுக்கு என்ன பதில்? ஒரே நாளில் முடிவெடுக்க முடியாது - மேயர் பிரியா
தூய்மை பணியாளர்களிடம் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தினோம் என மேயர் பிரியா கூறியுள்ளார்.
தூய்மை பணியாளர்கள் போராட்டம்
சென்னை மாநகராட்சி மண்டலம் 5, 6 ஆகியவற்றில் தூய்மைப் பணி தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 300-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கடந்த 1-ந்தேதி முதல் ரிப்பன் கட்டிடம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுடன் அமைச்சர் சேகர் பாபு, அமைச்சர் கே.என்.நேரு, மேயர் பிரியா ஆகியோர் இன்று 8-ம் கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேயர் பிரியா பதில்
ஆனால், தோல்வியில் முடிந்தது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மேயர் பிரியா, “தூய்மை பணியாளர்களுடன் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தினோம். தூய்மை பணியாளர்களுக்கு எப்போதும் பணிப் பாதுகாப்பு உள்ளது.
பல்வேறு சலுகைகளையும் அவர்களுக்கு அளிக்கிறோம். ஆகஸ்ட் 31க்குள் பணிக்கு திரும்பும் படி கோரியுள்ளோம். முதலில் பணிக்கு திரும்பட்டும். பிற கோரிக்கைகளை பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எடுக்கலாம். பணி நிரந்தரம், பணி பாதுகாப்பு ஆகிய கோரிக்கைகளை தூய்மைப் பணியாளர்கள் தரப்பில் முன்வைத்தனர்.
தூய்மை பணியாளர்களுக்கு முன் எப்போதும் இல்லாத வகையில் பணியில் பாதுகாப்பு இருக்கிறது. பல்வேறு சலுகைகளும் உள்ளன. அவர்கள் பணியில் சேர வேண்டும். பிற கோரிக்கைகள் குறித்து ஒரே நாளில் முடிவு எடுக்க முடியாது. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எடுக்கலாம்” எனத் தெரிவித்துள்ளார்.