சாமி படத்தின் பெருமாள் பிச்சையையே மிஞ்சிட்டாரு பழனிசாமி - விளாசிய ஆர்.எஸ்.பாரதி
பழனிசாமி சாமி படத்தின் பெருமாள் பிச்சையையே மிஞ்சி விட்டார் என ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளார்.
ஆர்.எஸ்.பாரதி அறிக்கை
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், எதிர்க்கட்சித் தலைவராகச் செயல்பட எத்தனையோ ’ஸ்கோப்’ இருக்க, ’பயோஸ்கோப்’ காட்டிக் கொண்டிருக்கிறார் ’சூனாபானா’ எடப்பாடி பழனிசாமி.
நிதி ஆயோக் கூட்டத்தை வைத்து எதிர்க் கட்சித் தலைவர் செய்யும் சேஷ்டைகள் சினிமாவில் கூட கண்டிராத நகைச்சுவை காட்சிகள். அதனைத் தமிழ்நாடு அரசு மட்டுமல்ல, தமிழ்நாட்டு மக்களும் ரசித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். நிதி ஆயோக் கூட்டத்தை வைத்து அதிகம் ஸ்கோர் செய்வது யார்? என எதிர்க்கட்சிகளுடன் போட்டா போட்டி நடக்கிறது.
ஒரே மாதிரியான நாக்பூர் ஸ்கிரிப்டை வைத்து விஜய்யும் பழனிசாமியும் மாறி மாறி நாக்கு வியாபாரம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஒரே மாதிரியான அறிக்கையைக் காப்பி பேஸ்ட் செய்து கொண்டிருக்கிறார்கள். பாஜகவுக்குத்தான் தமிழ்நாட்டின் எத்தனை கிளைக் கழகங்கள்? பிரத்தியேகமான நபரைப் பார்க்க வரவில்லை.
டெல்லியில் திறக்கப்பட்டுள்ள எங்களது கட்சி அலுவலகத்தைப் பார்வையிடவே வந்துள்ளேன்” எனப் பொய் முலாம் பூசியவர்தானே பழனிசாமி. டெல்லியில் உள்ள அண்ணா திமுக அலுவலகத்துக்கு ஒழுங்காக வெள்ளை அடித்திருக்கிறார்களா? எனப் பார்க்கப் போனவர், ஏன் மூன்று கார்களில் மாறி மாறிப் போனார்? ‘சாமி’ திரைப்படத்திற்கும் ’பழனிசாமி’ கேரக்டருக்கும் சம்பந்தம் உண்டு என்றால் இந்தச் சமூகம் நம்ப வேண்டும்.
அதிமுக அடமானம்
சாமி படத்தின் வில்லன் பெருமாள் பிச்சை கதாநாயகனிடம் இருந்து தப்பிக்க கிளைமேக்ஸில் கார்கள் மாறி மாறிப் போவார். அந்த பெருமாள் பிச்சையையே மிஞ்சி விட்டார் பழனிசாமி. அன்றைக்கு டெல்லியில் அமித்ஷாவுடன் பழனிசாமி சந்திப்பு நடப்பதற்கு முன்பே, "2026-ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமையும்’ என ஒன்றிய அமைச்சர் அமித் ஷா ட்வீட் போட்டாரே!
பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன்பே கூட்டணிக்கான அதிகாரத்தை அமித்ஷாவிடம் தாரை வார்த்ததை தவழப்பாடியார் மறந்துவிட்டாரா? தனது உறவினர்களுடைய வீட்டில் நடந்த ரெய்டுகளுக்கு பயந்துதான் பாஜகவின் பண்ணையடிமையாக பழனிசாமி மாறினார். அதற்காகத்தான் அதிமுகவை பாஜக கூட்டணியில் அடமானம் வைத்தார்.
தமிழ்நாட்டில் உள்ள அரசியல் அறியாத பிள்ளைகளுக்கு இந்த உண்மைத் தெரியும், 23-ம் புலிகேசியாக வாழும் தொடைநடுங்கி பழனிசாமி, ’ரெய்டைப் பார்த்து எனக்குப் பயமா?” என வீர வசனம் பேசுவதுதான் இந்த ஆண்டின் மிகச் சிறந்த நகைச்சுவையாகும். தனது உறவினரின் ஊழலுக்குச் சப்பைக் கட்டுக் கட்டியிருக்கிறார் பழனிசாமி,
650 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு செய்திருக்கிறார் எனும் ஊழல் குற்றச்சாட்டை “Discrepancies” என்கிறாரே பழனிசாமி ஊழலை “Discrepancies” என மாற்றுவதற்குத்தான் டெல்லியில் பதுங்கிப் பதுங்கி அமித்ஷாவை சந்திக்கச் சென்றாரா? பூனைக்குட்டி வெளிய வந்துவிட்டது என்பது போல அதிமுக வை அடகு வைத்ததற்கான டெல்லி டீலிங்கை வெளிப்படுத்தியிருக்கிறார் பழனிசாமி என குறிப்பிட்டுள்ளார்.