ஆட்டோவில் 6 புதிய வாஷிங் மெஷின்கள்; உள்ளே ரூ.1.30 கோடி பணம் - தேர்தல் பணமா?
விசாகப்பட்டினத்தில் வாஷிங் மெஷினுக்குள் வைத்து கடத்தப்பட்ட ரூ.1.30 கோடி பணத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
ஆட்டோவில் பணம்
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் விமான நிலைய போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக வந்த எலக்ட்ரானிக் கடை ஒன்றுக்கு சொந்தமான சரக்கு ஆட்டோவில் புதிய வாஷிங் மெஷின்கள் கொண்டு செல்வதை போலீசார் பார்த்தனர். பின்னர் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில், அதில் 6 வாஷிசிங் மெஷின்கள் சீல் பிரிக்கப்படாமல் இருந்துள்ளது.
இது குறித்து ஆட்டோ ஓட்டுநரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், இது விசாகப்பட்டணத்தில் இருந்து விஜயவாடாவுக்கு கொண்டு செல்வதாக அவர் கூறியுள்ளார். விஜயவாடாவுக்கு வாஷிங் மெஷின்கள் ஆட்டோவில் கொண்டு செல்லப்படுமா? என சந்தேகமடைந்த போலீசார் 6 வாஷிங் மெஷின்களை கீழே இறக்கி சோதனை செய்தனர்.
போலீசார் பறிமுதல்
அப்போது அதில் ரூ.1.30 கோடி பணம் மற்றும் 30 புதிய செல்போன்கள் இருந்தது தெரியவந்துள்ளது. மேலும், ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டதில், அனைத்தும் தசரா விற்பனையுடன் தொடர்புடையது என்று கூறியுள்ளார்.
மேலும் அந்த பணத்திற்கான விலைப்பட்டியல் மற்றும் அதுகுறித்த ஆவணங்களை சமர்ப்பிக்க தவறியதால், அந்த பணத்தை பறிமுதல் செய்த போலீசார் வருவாய் துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.
இதுகுறித்து வழக்கு பதிவும் செய்யப்பட்டுள்ளது. தெலங்கானா மாநிலத்தில் தேர்தல் நடைபெற இருப்பதால், மக்களுக்கு வழங்க ஹைதராபாத்துக்கு பணம் கடத்தப்பட்டு வருவதால், போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.