T20 world Cup: ஹர்திக் இடம்பெறுவாரா? எல்லாம் பொய்தான் - ரோஹித் ஷர்மா விளக்கம்!
உலகைக்கோப்பை
டி20 உலகைக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் மாதம் 1-ம் தேதி தொடங்கவுள்ளது. இந்த தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெறுகிறது. கடந்த 2007-ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பையை இந்திய அணி வென்றது.
இந்நிலையில் மீண்டும் இம்முறை இந்தியா கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது. இதனிடையே இந்த டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியை தேர்வுசெய்யும் பணி நடைபெற்று வருவதாக கூறப்பட்டது. மேலும், இந்த அணியில் ஹர்திக் பாண்டியா இடம் பிடிக்க வேண்டும் என்றால், இனி வரும் அனைத்து ஐபிஎல் போட்டிகளிலும் அவர் பந்துவீச்சில் மிகச்சிறப்பாக செயல்பட வேண்டும்.
ரோஹித் விளக்கம்
அப்படி அவர் அபாரமாக செயல்பட்டால் மட்டுமே அணியில் சேர்க்க வேண்டும் என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோர் உத்தரவிட்டிருப்பதாக தகவல் வெளியானது.
அதேபோல் உலக கோப்பை தொடரில் ரோஹித் மற்றும் கோலி தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள ரோஹித் ஷர்மா "என்னிடம் இருந்தோ, ராகுல் டிராவிட்டிடம் இருந்தோ, தேர்வுக்குழுவிடம் இருந்தோ எந்தத் தகவலும் வரும்வரை நீங்கள் கேட்கும் அனைத்து செய்திகளுமே பொய்தான். அதேபோல் டி20 உலகக் கோப்பை தொடரில் யார் தொடக்க ஆட்டக்காரர்களாக விளையாடப்போவது என இன்னும் முடிவெடுக்கவில்லை" என்று தெரிவித்துள்ளார்.