உங்கள் உழைப்பு உங்களுக்கு..! இயக்குநர் மணிகண்டனின் தேசிய விருதுகளை திருப்பி ஒப்படைத்த திருடர்கள்!
இயக்குநர் மணிகண்டன் வீட்டில் திருடிய 2 தேசிய விருதுகளை கொள்ளையர்கள் திருப்பி ஒப்படைத்துள்ளனர்.
கொள்ளை
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, எழில் நகரில் வசித்து வருபவர் இயக்குநர் மணிகண்டன். இவர் காக்கா முட்டை, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை, கடைசி விவசாயி ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

மேலும், தனது திரைப்படங்களுக்காக 2 தேசிய விருதுகளையும் அவர் வென்றுள்ளார். தனது குடும்பத்தினருடன் சென்னையில் வசிக்கும் மணிகண்டன் அவ்வப்போதுதான் உசிலம்பட்டியில் உள்ள வீட்டிற்கு செல்கிறார்.
இதனை அறிந்த கொள்ளையர்கள் கடந்த 8-ம் தேதி வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த ரூ.1 லட்சம் பணம் மற்றும் 5 பவுன் நகைகளை திருடிச் சென்றுள்ளனர்.
பதக்கங்கள்
அதனுடன் அவரது 2 தேசிய விருது வெள்ளி பதக்கங்களையும் திருடிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வந்த நிலையில், மணிகண்டனின் வீட்டு வாசலில் தேசிய விருது பதக்கங்களை மட்டும் கொள்ளையர்கள் திரும்ப வைத்து சென்றுள்ளனர்.

அதனுடன் ஒரு கடிதத்தையும் எழுதி வைத்துள்ளனர். அந்த கடிதத்தில், "அய்யா எங்களை மன்னித்து விடுங்கள் உங்கள் உழைப்பு உங்களுக்கு" என்று எழுதப்பட்டுள்ளது.
இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் தேசிய விருது பதக்கங்களையும், அந்த கடிதத்தையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
2 ஆண்டுக்கு பின்பு சொந்த ராசியில் செவ்வாய் பெயர்ச்சி... அதிர்ஷ்டத்தை பெறும் ராசியினர் யார்? யார்? Manithan