களவாடுவதற்கு வீடு புகுந்தவர்கள் ஷாக்... கதவோரம் ரூ.500 வைத்துவிட்டு சென்ற திருடர்கள்!
திருடுவதற்காக வீடு புகுந்து ஏமாற்றமடைந்த திருடர்கள் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொள்ளையர்கள்
டெல்லியில், ரோகினி செக்டார் 8-ல் வயதான தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த 19-ம் தேதி அன்று குர்கானில் உள்ள மகனை சந்திக்க சென்றுள்ளனர். அப்பொழுது யாரும் இல்லாத நேரம் பார்த்து கொள்ளையர்கள் அங்கு திருட சென்றுள்ளனர்.
பின்னர் அந்த வயதான தம்பதியினர் மகனை சந்தித்து விட்டு மீண்டும் வீடு திரும்பியுள்ளனர். அப்பொழுது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது, இவர்களது வீட்டில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளதாக அக்கம் பக்கத்தினர் கூறினர்.
அதிர்ச்சி சம்பவம்
இந்நிலையில், அதிர்ச்சியடைந்த வயதான தம்பதியினர் உள்ளே சென்று பார்த்தனர். அப்பொழுது வீட்டில் இருந்து எந்தவொரு பொருளும் காணாமல் போகவில்லை. ஆனால் வீட்டில் திருடுவதற்கு எதுவும் இல்லாததால் திருடர்கள் ரூ.500 நோட்டை கதவின் அருகே வைத்து விட்டு சென்றுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து வடக்கு ரோகினி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த சம்பவம் அப்பகுதியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.