பாகிஸ்தான், தமிழ்நாட்டில் போதைப்பொருள் கிடங்கு உள்ளது - ஆர்.என்.ரவி விமர்சனம்
மாநில காவல்துறை போதைப்பொருட்களை கைப்பற்றுவதில்லை என ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியுள்ளார்.
ஆர்.என்.ரவி
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் போதை ஒழிப்பு பேரணி நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த பேரணியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, "40 ஆண்டுகளுக்கு முன்னால் அனைத்து துறைகளில் பஞ்சாப் முதன்மையாக விளங்கியது. தற்போது போதை பழக்கத்தால் மோசமான நிலையை சந்தித்து வருகிறது என கூறினார்.
போதைப்பொருள் கிடங்கு
தமிழகத்தில் அதிகளவு கஞ்சா பிடிக்கப்பட்டதாக மட்டுமே தகவல்கள் உள்ளது. மத்திய அரசு போதை தடுப்பு பிரிவினர் மூலம் மட்டுமே பிற போதைப்பொருட்கள் பிடிக்கப்படுகிறது. மாநில போதை தடுப்பு பிரிவினரால் கஞ்சா மற்றும் 1 கிராம் போதை பொருட்கள் பிடிக்கப்பட்டதாக தகவல் இல்லை.
மத்திய நிறுவனங்கள் டன் கணக்கில் போதை பொருட்களை பறிமுதல் செய்கிறது. பாகிஸ்தான், துபாய், தமிழ்நாடு உள்ளிட்ட பகுதிகளில்தான் போதைப்பொருள் கிடங்குகள் செயல்படுகின்றன.
போதைப் பழக்கத்தில் மாணவர்கள்
இளைஞர்கள், மாணவர்கள் போதைப் பொருட்களால் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். முதலில் வேடிக்கையாக ஆரம்பிக்கும் போதைப் பழக்கம் குறுகிய காலத்தில் உயிரை மாய்த்துவிடும். பள்ளி, கல்லூரிகளில் போதைப் பழக்கத்துக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.
தமிழகத்தில் பல மாணவர்கள், இளைஞர்கள் ரசாயன போதைப் பொருட்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக பெற்றோர்கள் என்னிடம் புகார் கூறுகின்றனர் பிள்ளைகளின் செயல்பாடுகளை பெற்றோர் கண்காணிக்க வேண்டும். பிள்ளைகளுக்காக தினமும் நேரத்தை செலவிட்டு அவர்களுடன் உரையாட வேண்டும். அவர்களை தனிமையில் இருக்க பழக்கப்படுத்தக் கூடாது" என பேசினார்.