சில சமுதாயத்தை திருப்திப்படுத்தவே மதசார்பின்மை - ஆர்.என்.ரவி சர்ச்சை பேச்சு
பாரத்தையும் இந்து தர்மத்தையும் பிரிக்க முடியாது என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
ஆர்.என்.ரவி
தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி பதவி ஏற்றதில் இருந்து அவருக்கும் தமிழக அரசுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. மேலும் ஆளுநர் ஆர்.என்.ரவியும் அவ்வப்போது சர்ச்சை கருத்துகளை கூறி வருவது வழக்கம்.
இதே போல் தற்போது மதசார்பின்மை குறித்து அவர் தெரிவித்த கருத்து சர்ச்சையாக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறில் வெள்ளிமலை இந்துதர்ம வித்யாபீடம் சார்பில் நடைபெற்ற வித்யாஜோதி மற்றும் வித்யாபூஷன் பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டார்.
பாரதம் இந்து தர்மம்
இதில் பேசிய அவர், "இந்துதர்மம்தான் பாரதத்தை உருவாக்கியது. பாரதம் இந்து தர்மம் ஆகியவைப் பிரிக்க முடியாதது. ஆயிரம் ஆண்டுகளாக அயலாரின் ஆட்சியில் நம் தர்மத்தை அழிக்கும் அத்தனை முயற்சியையும் செய்தார்கள். அதையெல்லாம் கடந்து நாம் வந்திருக்கின்றோம்.
1000 ஆண்டுகளாகச் சில புதியவர்கள் வந்தார்கள். அவர்கள் எங்கள் மதம்தான் சிறந்தது நீங்கள் இங்கே வரவேண்டும் எனச் சொன்னார்கள். கோயில்களை அழித்தார்கள். ஆனாலும் சனாதன தர்மத்தை அழிக்க முடியவில்லை.
மதச்சார்பின்மை
முகலாயர்களும், ஆங்கிலேயர்களும் ஒன்றன்பின் ஒன்றாக நம் நாட்டுக்கு வந்து சனாதன தர்மத்தை அழிக்க முயன்றார்கள். சுதந்திரத்துக்குப் பின் நம் தர்மம் எழுச்சி பெறும் என நினைத்தோம். துரதிஸ்டவசமாக அது நடக்கவில்லை. இந்தியாவில் பிரிட்டிஸ் ஆட்சியில் அவர்களுடன் சேர்ந்து மிஷனரிகளும் பல வேலை செய்தார்கள்.
வெள்ளைக்காரர்கள் சென்ற பின் பல ஏமாற்று வேலைகள் இங்கு அரங்கேறின. தவறான கோட்பாடுகள் நமக்குச் சொல்லப்பட்டன. அதில் முக்கியமானது மதச்சார்பின்மை என்பதாகும். மதச்சார்பின்மை என்ற வார்த்தை நமது அரசியல் சாசனத்தில் இடம்பெறவே இல்லை. 25 ஆண்டுகளுக்குப் பிறகு அவசரக்கால நிலை அமல்படுத்தப்பட்டபோது, சில சமுதாயத்தை திருப்திப்படுத்துவதற்காக மதச்சார்பின்மை என்ற வார்த்தை சொருகப்பட்டது." என பேசியுள்ளார்.