சுங்கத்துறை மோப்ப நாய் இராணிக்கு உடல்நலம் பாதிப்பு - கட்டாய ஓய்வளித்த அதிகாரிகள்!
உடல்நிலை பாதிக்கப்பட்டதால் சென்னை விமான நிலைய சுங்கத்துறை மோப்ப நாய் இராணிக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
மோப்ப நாய் இராணி
சென்னை விமான நிலையத்தில் கார்கோ சரக்கு பகுதிக்கு வெளிநாடுகளிலிருந்து அதிகளவில் போதைப் பொருட்கள் கடத்தப்பட்டு வந்தது. இதனை கண்டறிய கடந்த 2022ம் ஆண்டு 'இராணி' என்ற மோப்ப நாய் விமான நிலைய சுங்கத்துறை மோப்ப நாய் பிரிவில் சேர்க்கப்பட்டது.
அங்கு போதைப் பொருள் கடத்தலை கண்டுபிடிப்பதில் நிபுணராக இராணி செயல்பட்டு வந்தது. இந்நிலையில் சுமார் 3வயதுடைய மோப்ப நாய் இராணிக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தது . ஆனாலும் உடல் நல பாதிப்பை பற்றி கவலைப்படாமல் இராணி சிறப்பாக பணியாற்றி வந்தது.
கட்டாய ஒய்வு
இருந்தும் சுங்கத்துறை அதிகாரிகள் இராணி நோய்வாய்ப்பட்டதால் கவலை அடைந்தனர். இதனையடுத்து இராணியை பரிசோதித்த மருத்துவ நிபுணர்கள் அதற்கு கட்டாய ஓய்வு அளிப்பது நல்லது என்று தெரிவித்தனர்.
இதன் காரணமாக மோப்ப நாய் இராணிக்கு பணியிலிருந்து கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னை விமான நிலைய சுங்கத்துறை அலுவலகத்தில், இராணிக்கு, சுங்கத்துறை அதிகாரிகள் பிரிவு உபசார நிகழ்ச்சி செய்து வழியனுப்பினர்.
மேலும், இராணி பஞ்சாபில் உள்ள ஓய்வுபெற்ற உடல் நலம் பாதிக்கப்பட்ட நாய்கள் புணர்வாழ்வு மையத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அங்கு இராணிக்கு உரிய சிகிச்சை அளித்து பராமரிக்கப்படவுள்ளது.