'ஈ சாலா கப் நம்து' சாம்பியன் பட்டத்தை வென்ற RCB மகளிர் அணி - விராட் கோலி வாழ்த்து!
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் 2வது சீசனில் பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் வென்றது
இறுதிப் போட்டி
மகளிர் பிரீமியர் லீக் (WPL) கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நேற்று டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின.
டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து களமிறங்கியது. ஆனால், பெங்களூர் அணி வீராங்கனைகள் சிறப்பான பந்து வீச்சில் விக்கெட்டுகளை இழந்த டெல்லி அணி தடுமாறியது.
இதனால் 18.3 ஓவர்களில் ஆல் அவுட்டான டெல்லி, 113 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனைத் தொடர்ந்து 114 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூர் அணி களமிறங்கியது.
பெங்களூரு வெற்றி
இதில் சிறப்பாக ஆடிய பெங்களூரு அணி 19.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் 2வது சீசனில் பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் வென்றது.
இதையடுத்து பெங்களூரு அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனாவுக்கு, விராட் கோலி வீடியோ கால் மூலம் வாழ்த்து தெரிவித்தார். மேலும், சாம்பியன் பட்டம் வென்றது குறித்து பேசிய மந்தனா" ஆர்.சி.பி ரசிகர்களிடமிருந்து 'ஈ சாலா கப் நம்தே' என்ற ஒரு கருத்து எப்போதும் வந்து கொண்டிருக்கும்.
இனிமேல் அது 'ஈ சாலா கப் நம்து' (இப்போது கோப்பை நம் வசம்). கன்னடம் என்னுடைய மொழி கிடையாது. ஆனால் இதை ரசிகர்களுக்கு சொல்வது முக்கியம்" என்று மகிழ்சசி தெரிவித்தார்.