தோனி 15 வருஷமா சொன்ன ஒரே அட்வைஸ், இப்போ தான் ஏன்னு புரியுது - அஸ்வின்!
எம்.எஸ். தோனி கொடுத்த அறிவுரை குறித்து இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியுள்ளார்.
எம்.எஸ்.தோனி
இந்திய கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த கேப்டன்களில் ஒருவராக திகழ்ந்தவர் எம்.எஸ்.தோனி. இந்திய அணிக்காக டி20, ஒரு நாள் கிரிக்கெட், சாம்பியன்ஸ் டிராபி, ஆசியக் கோப்பை ஆகியவற்றை வென்று கொடுத்துள்ளார்.
கடந்த 2020-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற தோனி, தற்போது ஐ.பி.எல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். எம்.எஸ். தோனி எப்போதும் இளம் வீரர்கள் உட்பட அனைவருக்கும் சிறந்த அறிவுரைகள் வழங்குவார்.
அதனை கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும்போதும் நாம் பார்த்திருப்போம். அவர் கூறிய அறிவுரைகள் தங்களுக்கு மிகவும் உதவிகரமாக இருந்ததாக பல்வேறு வீரர்களும் தெரிவித்து வருகின்றனர்.
அஸ்வின்
அந்தவகையில், கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக தோனி தன்னிடம் ஒரே அறிவுரையை தான் கூறியதாகவும், அந்த அறிவுரை தற்போது தான் தனக்கு புரிந்ததாகவும் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில் "சென்னை அணிக்காக அவர் என்னை தொடர்ந்து பயன்படுத்தினார். ஒருகட்டத்தில் புதிதாக முயற்சிக்கும் உனது வழக்கத்தை யாருக்காகவும் மாற்றிக் கொள்ளாதே. தொடர்ந்து உற்சாகமாகவும், வேடிக்கையாகவும் இரு என்று கூறினார்.
அவர் அப்படி சொன்னது கிரிக்கெட் மட்டுமின்றி ஒருவரின் மனவலிமை மற்றும் பல்வேறு விஷயங்களை பற்றி என்பதை நான் இப்போது புரிந்து கொண்டேன்" என்று தெரிவித்துள்ளார்.