பிரதமர் மோடிஜி மீது நம்பிக்கை இருக்கு; அவர் ஒரு போராளி - நடிகர் ரஜினிகாந்த்
பஹல்காம் தாக்குதல் குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேசியுள்ளார்.
பஹல்காம் தாக்குதல்
மும்பையில் இன்று முதல் நான்கு நாள்களுக்கு திரைத்துறையை சார்ந்த WAVES 2025 (World Audio Visual and Entertainment Summit) நிகழ்ச்சி நடக்கவுள்ளது.
இதில் திரைத்துறை பிரபலங்கள், அரசியல்வாதிகள் என பலர் கலந்துகொள்ளவுள்ளனர். இந்நிலையில் இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த் பேசுகையில், "பஹல்காமில் காட்டுமிராண்டித்தனமான, இரக்கமற்ற சம்பவம் நடந்தப் பிறகு, பலர் என்னிடம்,
'இது பொழுதுபோக்கு சார்ந்த நிகழ்ச்சி என்பதால் இந்த நான்கு நாள் நிகழ்ச்சியை அரசு தள்ளிப்போடும்' என்று கூறினர். ஆனால், நான் இந்த நிகழ்ச்சி கட்டாயம் நடக்கும் என்று நம்பிக்கையோடு இருந்தேன். காரணம், எனக்கு என் பிரதமர் மோடிஜி மீது நம்பிக்கை உள்ளது. ஏனெனில் அவர் ஒரு போராளி.
ரஜினி புகழாரம்
அவர் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்வார். இதை அவர் நிரூபித்தும் உள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக அதை நாம் பார்த்து தான் வருகிறோம். பிரதமர் காஷ்மீர் சம்பவத்தை தைரியமாகவும், அழகாகவும் கையாள்வார்.
காஷ்மீரில் நிச்சயம் அமைதியையும், நம் நாட்டிற்கு பெருமையையும் கொண்டு வருவார். நான் இந்த நிகழ்ச்சியில் பங்குகொள்வதற்கு மகிழ்ச்சியடைகிறேன். மத்திய அரசுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்" என்று தெரிவித்துள்ளார்.