ராகுல் அசத்தல் சதம்: வலுவான ஸ்கோரை எட்டிய இந்திய அணி
ராகுல், பண்ட் மற்றும் கோலி அதிரடியால் வலுவான ஸ்கோரை இந்தியா எட்டியுள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கிலும், 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரை 3-2 என்ற கணக்கிலும் இந்திய அணி கைப்பற்றியது. இதனை அடுத்து இவ்விரு அணிகள் இடையேயான 3 ஆட்டங்கள் அடங்கிய ஒரு நாள் போட்டி தொடர் மகாராஷ்டிர மாநிலம் புனேயில் உள்ள மராட்டிய கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி நடத்தப்படுகிறது.
ரசிகர்களுக்கு அனுமதி இன்றி நடைபெறும் இந்த போட்டி தொடர் பூட்டிய ஸ்டேடியத்தில் அரங்கேறுகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி கடந்த 23-ம் தேதி நடைபெற்றது. அப்போட்டியில் இந்தியா வெற்றிபெற்றது. இந்நிலையில், இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி புனேயில் இன்று பகல்-இரவு ஆட்டமாக நடைபெறுகிறது. இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது.
அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பட்லர் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்துவருகிறது. இதில், தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் சர்மா (25), ஷிகர் தவான் (4) ரன்களில் ஆட்டமிழந்தனர். எனினும் கேப்டன் விராட் கோலி அதிரடியாக விளையாடி அரை சதம் பூர்த்தி செய்துள்ளார்.
அவர், 66 ரன்கள் (79 பந்துகள் 3 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி ஆட்டமிழந்துள்ளார்.
கோலி, ராகுல் இணை 119 பந்துகளில் 100 ரன்களை எடுத்தனர். கோலியை தொடர்ந்து ராகுலும் அரை சதம் விளாசினார். முதல் ஒரு நாள் போட்டியில் அரை சதம் அடித்த கோலி (56) இந்த போட்டியிலும் அரை சதம் விளாசியுள்ளார். இதேபோன்று ராகுலும் முதல் ஒரு நாள் போட்டியில் அரை சதம் (62) அடித்ததுடன் ஆட்டமிழக்கவுமில்லை. மேலும் ராகுல் 2 வது ஒரு நாள் போட்டியில் தனது 6வது சதத்தையும் (109) பதிவு செய்தார்.
50 ஓவர்கள் முடிவில் இந்தியா அணி 336 ரன்கள் விளாசி 6 விக்கெட்டுகளை இழந்து உள்ளது.