காங்கிரஸில் விஜய் பொறுப்பு கேட்டார்...ராகுல் கூறிதான் கட்சி ஆரம்பித்தார் - விஜயதரணி!
விஜய் கட்சி தொடங்குவதற்கு காரணமே ராகுல் காந்திதான் என விஜயதரணி பேசியுள்ளார்.
விஜயதரணி
சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் ”தமிழகம் மீட்போம், தளராது உழைப்போம்” என்ற தலைப்பில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது.
அப்போது பொதுக்கூட்ட மேடையில் பாஜக பிரமுகர் விஜயதரணி கலந்துக்கொண்டு பேசியதாவது, "நான் 3 முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, இரண்டரை ஆண்டுக்காலம் பதவி இருந்தும், இருக்கின்ற பதவியையும் விட்டுவிட்டு பாஜகவில் இணைந்துள்ளேன்.
அதற்காக எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வரவில்லை, எதிர்பார்ப்போடுதான் வந்துள்ளேன். தற்போது காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்து 6 மாதமாகி விட்டது. இன்னும் பதவி கொடுக்கவில்லை. எனக்கு நல்லது பண்ணுவீங்க என தெரியும்.என்னை போன்றவர்களை பாஜக நிச்சயம் பயன்படுத்தும்.
விஜய் கட்சி
என்ன அண்ணே சரிதானே? என அண்ணாமலையைப் பார்த்து விஜயதரணி கேட்டார். அவரது இந்த பேச்சு பாஜக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், விஜய் கட்சி தொடங்க காரணமே ராகுல்காந்திதான் என்று பரபரப்பான புதிய தகவலை விஜயதரணி தெரிவித்துள்ளார்.
அதாவது, தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், "நடிகர் விஜய், ராகுல்காந்தியிடம் காங்கிரஸ் கட்சியில் பொறுப்பு கேட்டார். உங்கள் செல்வாக்கிற்கு தனிக் கட்சியே தொடங்கலாம் என ராகுல் காந்தி யோசனை கொடுத்தார்.அதன் விளைவாக தான் தற்போது விஜய் கட்சி ஆரம்பித்துள்ளார்.
அதனால் காங்கிரஸ் கட்சியுடன் அவர் இணக்கமாக போவதற்கு வாய்ப்புகள் அதிகம். ஆனால் அவர் யாருடன் கூட்டணி அமைக்க போகிறார். யாரை எதிர்க்கப் போகிறார் என்பதை பொறுத்து இங்கு அரசியல் மாற்றங்கள் நிகழும் என்று தெரிவித்துள்ளார்.