கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் - ராதாகிருஷ்ணன் வேண்டுகோள்
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவல் காரணமாக, பொதுமக்கள் அனைவரும் மிகுந்த விழிப்புணர்வுடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்றும், முககவசம் அணிய வேண்டும் என்று தமிழக அரசு சார்பாக அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, “தமிழகத்தில் கொரோனா வேகமாகப் பரவி வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து தொடர்புகள் மூலமாக கொரோனா அதிகமாக பரவும்.

கொளத்தூர், நங்கநல்லூர், கோடம்பாக்கம், ஆதம்பாக்கம் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோயம்புத்தூர் பகுதிகளில் கூடுதல் பரிசோதனைகளை மேற்கொள்ள அந்தந்த மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும்.
கொரோனா விழிப்புணர்வுக்கு ஒத்துழைப்பு அளித்து பரவலைக் கட்டுப்படுத்த உதவ வேண்டும். கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்காவிட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.