உயிரிழந்த மகன் குறித்து அறிய கல்லறையில் க்யூஆர் கோடு வைத்த பெற்றோர்!
உயிரிழந்த மகன் குறித்து அறிய கல்லறையில் பெற்றோர் க்யூஆர் கோடை பொறித்துள்ளனர்.
மகன் உயிரிழப்பு
கேரளா, குரியாச்சிராவைச் சேர்ந்தவர் பிரான்சிஸ். இவரது மனைவி லீனா. மத்திய கிழக்கு நாடான, ஓமனில் வசித்து வரும் இவர்களுக்கு ஐவின் பிரான்சிஸ் என்ற மகன் இருந்தார். இவர், 2021ல் பேட்மின்டன் விளையாடிய போது, எதிர்பாராதவிதமாக மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
தொடர்ந்து, அங்குள்ள செயின்ட் ஜோசப் சர்ச் கல்லறையில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், தனது தம்பி குறித்த தகவல்கள் அனைத்தையும் அனைவரும் அறிந்து கொள்ளும் விதமாக அவரின் கல்லறையில் 'க்யூஆர் கோடு' பதிக்க அவரது அக்கா யோசனை தெரிவித்துள்ளார்.
கல்லறையில் QR
அதன்படி, தங்கள் மகனின் கல்லறையில் க்யூஆர் கோடை பெற்றோர் பதித்துள்ளனர். இதை ஸ்கேன் செய்வதன் வாயிலாக ஐவின் பிரான்சிஸ் புகைப்படங்கள், அவரது கல்லுாரி நிகழ்ச்சிகள் மற்றும் அவரைப் பற்றிய பிற விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
மேலும், அவரது கீபோர்டு மற்றும் கிட்டார் நிகழ்ச்சிகளை வீடியோவாக காணலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறந்த மகனின் நினைவுகளுக்கு உயிரூட்டும் விதமாக செய்யப்பட்டுள்ள இந்த ஏற்பாடு அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.