ரஷ்யர்கள் ஒருவரையொருவர் அடித்துக்கொள்ள வேண்டும் என எண்ணுகிறார்கள் - அதிபர் புடின் காட்டம்!
ரஷ்யாவின் வாக்னர் கூலிப்படை எதிர்தாக்குதல் குறித்து அதிபர் புடின் கட்டமாக பேசியுள்ளார்.
வாக்னர் குழு
கடந்த வருடத்திலிருந்து ரஷ்யா - உக்ரைனுக்கிடையே போர் நடந்து வந்தது. இதில் ரஷ்யாவுக்கு ஆதரவாக வாக்னர் எனும் கூலிப்படைக் குழு செயல்பட்டது. தற்போது திடீரென இந்த கூலிப்படை ரஷ்யா மீது எதிர்த்தாக்குதல் நடத்தியது.
இதில் ரஷ்ய அதிபர் புடின், "வாக்னர் குழுவின் செயல் முதுகில் குத்துவது போன்ற துரோகம். இதற்கு வாக்னர் குழுவுக்குக் கடுமையான தண்டனை கொடுக்கப்படும்" என எச்சரித்திருந்தார். அதன்பிறகு வாக்னர் கூலிப்படையின் தலைவர் யெவ்ஜெனி ப்ரிகோஜினுடன் பேச்சுவார்த்தை நடத்தியதில் தாக்குதலில் பின்வாங்கியது.
புடின்
இந்நிலையில், ரஷ்ய அதிபர் புடின் நாட்டு மக்களிடம் தொலைக்காட்சி மூலம் பேசினார், "வாக்னர் குழுவின் கிளர்ச்சியின்போது, உக்ரைனும் அதன் நட்பு நாடுகளும், ரஷ்யர்கள் ஒருவரையொருவர் கொலைசெய்துகொள்ள வேண்டும் என விரும்பினர்.
ஆனால், எனது உத்தரவின் பேரில் பெரிய அளவிலான தாக்குதலைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கு ரஷ்யர்களின் தேசபக்தி பெரும் காரணம். அதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
ரஷ்யாவின் எதிரிகள் விரும்பியது துல்லியமாக இந்தச் சகோதர படுகொலையைத்தான். ரஷ்யாவுக்கு எதிரான எந்தவொரு அச்சுறுத்தல், உள்நாட்டு கொந்தளிப்புகளை ஏற்படுத்த செய்யும் எந்தவொரு முயற்சியும் தோல்வியடையும் என்பதை ரஷ்ய பொதுமக்களின் ஒற்றுமை காட்டுகிறது" என்று கூறியுள்ளார்.